கோவை புலியகுளம் பகுதியில் 1000 பெண்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் முயற்சியாக சுயம் என்கிற பெயரில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "கோவை அம்மன்குளம் பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெண்களுக்கு சமர்த் என்கிற மத்திய அரசின் தையல் பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளதாகவும், பயிற்சி முடித்தபின், தொழிலை மேற்கொள்ளும் வகையில் இலவச தையல் இயந்திரங்கள் தனியார் உதவியுடன் வழங்கப்படும்" என்றார். இதுபோன்ற திட்டங்களை பழங்குடியினர், பட்டியலின மக்கள் பகுதியில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடிப்படையில், இதுவரை 8 இடங்களில் பயிற்சி தொடங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.


தாய்ப்பால் வாரம் கொண்டாடி வரும் நிலையில், "கடந்த அரசு ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் வகையில், கோவை மத்திய பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் கொடுக்க அமைக்கப்பட்டு உள்ள அறை நீண்ட நாட்களாக மூடப்பட்டு உள்ளது. சமூக நீதி அரசு, பெண்களுக்கான அரசு என சொல்லும் முதல்வர், பெண்களுக்கு பேருந்து பயணத்தை கொடுத்தேன் என பெருமையாக சொல்லும் முதல்வர், பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் கொடுக்கும் அறை சரியாக இயங்குகிறதா? எனப் பார்த்து, ஆரோக்கியமான அறையாக மாற்ற கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். மேலும், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குறிப்பிட்ட பகுதியை அழகு செய்வதற்கு மட்டுமின்றி, அந்த பொது இடத்தில் கழிவறை, தாய்ப்பால் கொடுக்கும் அறை  ஏற்படுத்த மாநகராட்சி ஆணையாளரிடம் வலியுறுத்த உள்ளதாக" கூறினார்.


பெண்களுக்கு இலவசமாக பேருந்து என அறிவித்துவிட்டு, அந்த பகுதியில் இருந்து முழுவதுமாக பேருந்தை நீக்கப்பட்டு உள்ளதாகவும், பெண்களுக்கு வாக்குறுதிகள் இல்லை, வசதிகள்தான் தேவை என்றார். ஐ புள்ளி, என் புள்ளி, டி புள்ளி, ஐ புள்ளி, ஏ புள்ளி அந்த ராஜாக்களுடன் கைக்கோர்த்து நிற்காமல், மோடிக்கு எதிராக முழக்கமிடாமல், மேடையில் இருந்த நேரத்திற்குள் மாநிலத்தின் முதல்வர் காவிரி பிரச்சனையை பேசி முடித்து இருக்கலாம். கர்நாடகாவில் பாஜக அரசு இருந்தவரை காவிரி நதி நீர்பிரச்சனை மக்களை பாதிக்கவில்லை. இவ்விவகாரத்தில் காங்கிரஸ், தி.மு.க இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளன. அருகில் உள்ள மாநிலத்தில் மோடிக்கு எதிராக கூட்டணி அமைக்க தெரிந்த முதல்வருக்கு, காவிரி பிரச்னைக்கு அருகில் மேடையில் உட்கார்ந்து பேசும் நேரத்தில் பேசி முடித்து விடாமல், விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்று தர முடியாதா?  இதற்கு பிரதமருக்கு கடிதம் வேறு எழுத வேண்டுமா? எனக் கேட்டார்.


கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டதால் கோவை மக்களுக்கு குடிநீர் பிரச்னையின்றி கிடைக்கும் என்றும், தற்போது 13-15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருவதால், சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பா.ஜ.க மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். கட்சியுடன் கைக்கோர்த்து உள்ள முதல்வர் கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோவை மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஒட்டுமொத்தமாக அரிசி இருப்பின் நிலையை பார்த்துதான் மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து உள்ளதாகவும், அரிசி அதிகமாக ஏற்றுமதியாகிவிட்டால், நம் மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நெல் விளைச்சல் அதிகமாக வந்து அரிசி தேவையான அளவு கையிருப்பு வந்தவுடன் இந்த உத்தரவை மத்திய அரசு மாற்றிக்கொள்ளும் என்றார்.