தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் என்றால் திமுக மற்றும் அதிமுக தான். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு கட்சிகள், மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இரண்டு கட்சிகளிலும் பல்வேறு காலகட்டங்களில் உட்கட்சி மோதல் நடந்தது, கட்சிகள் பிளவு பட்ட பிறகும் இரண்டு கட்சிகளுமே அசைக்க முடியாத சக்திகள் வலம் வருகின்றன. 

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. திமுகவை பொருத்தவரை 2019-இல் இருந்து தொடர்ந்து அவர்களுடைய கூட்டணியை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.‌

ஐ.டி.விங்க் பலப்படுத்தும் எடப்பாடி

அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி ஒருபுறம் இருந்தாலும், இப்போதே அதிமுக தேர்தல் பணிகளை துவங்கியிருக்கிறது. மாவட்ட வாரியாக பூத் பணிகள் நடைபெற்று வந்தாலும், இளம் தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில், சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை அதிமுக தொடங்கியிருக்கிறது.‌ 

குறிப்பாக கூட்டணி எப்படியாக இருந்தாலும், திமுகவின் மீது இருக்கும் அதிருப்தி, அதிமுகவிற்கு வெற்றியை தரும் என எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக நம்புகிறார். சமீபத்தில் கூட  ஐ.டி..,விங் அணியை பலப்படுத்தவும், திமுகவிற்கு எதிராக ஆதாரப்பூர்வமாக வீடியோக்கள், தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு எடப்பாடி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்புக்கு, எதிராக அதிமுக ஐ.டி விங்க், அணியினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

சமூக வலைதளத்தில் வெடித்த சண்டை

குறிப்பாக, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் திமுக அரசுக்குக்கு ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. அந்த சம்பவம் நடந்து ஓராண்டாகியும் இதில் நீதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் திமுகவின் மீது இருந்து வருகிறது. பேஸ்புக் மற்றும் எக்ஸ் வலைதளங்களில் ஹேஸ்டாக் மூலம் இதனை தேசிய அளவில், அதிமுக ஐ.டி.விங்க் கள்ளச்சாராயம் சாவுக்கு எதிராக, பதிவுகளை பதிவு செய்துள்ளது.

 

காலையில் தொடங்கிய இந்த ட்ரெண்டிங், இன்று மாலை வரை நீடித்து வருகிறது. அதிமுகவினரின் இந்த திடீர் பதிவுகளை திமுக தரப்பு கணிக்க தவறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென ஒரே நேரத்தில் அதிமுகவினர் இறங்கி அடித்ததால், திமுகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் தற்போது சமூக வலைத்தளத்தில் இரண்டு தரப்பும், கடும் மோதலில் ஈடுபட்டு வருகிறது. 

இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளிடம் பேசியபோது: "திமுக ஆட்சிக்கு எதிரான பதிவுகள் இனி அதிகரிக்க தொடங்கும். அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி மக்களிடம் கொண்டு சென்றாலே போதும், திமுக ஆட்சி அகற்றப்பட்டுவிடும். எங்களது பதிவுகளை நீக்கும் வேலையிலும் திமுகவினர் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.