சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் அரசுக்கு எதிராகவும், ஈழத்திற்கு தனிநாடு வேண்டும் என்று பேசியதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் மூன்றில் நடைபெற்று வந்தது. இந்த நிலை வழக்கு விசாரணைக்கு கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அப்போது சீமான் தரப்பு வழக்கறிஞர் விசாரணையில், சில காரணங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்று மனுதாக்கல் செய்திருந்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணை கடந்த 18 ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் அப்பொழுதும் சீமான் ஆஜர்ஆகவில்லை. ஏற்கனவே பிடிவாரண்டு நிலுவையில் உள்ளது.


இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணையானது அடுத்த டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். தற்போது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 3 இல் ஆஜரானார். நீதிமன்றத்திற்கு சீமான் வந்ததை ஓட்டி காவல் துறையினர் பாதுகாப்பு அதிகளவில் போடப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் பரபரப்பாக நீதிமன்றம் காட்சியளித்தது.



நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், “ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் ஆளுநருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. மக்களின் நலன்கருதி எந்தவித முடிவும் எடுக்கமுடியாமல் நகர்ந்து போகிகிறது. இதனால் தான் ஆளுநரை அவசியம் இல்லை என்று சொல்கிறோம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி ஒரு முடிவு எடுக்கிறது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் தடுக்கிறார். அப்படி என்றால் எட்டு கோடி மக்களுக்கு மதிப்பு எங்கு உள்ளது? எங்கு ஜனநாயகம் உள்ளது” என்று கேள்வி எழுப்பினார்.


மேலும், “ஆளுகின்ற திமுக தவறான பாதையில் செல்கிறதாக அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார். பாஜக ஆட்சியில் எதில் சரியாக செல்கிறது. எல்லாம் எடுத்து தனியார் முதலாளிகளுக்கு கொடுத்துள்ளார்கள். மக்களை பதட்டத்தில் வைத்துள்ளனர். அனைத்தும் ஆதார் தான் என்றால் தேசிய குடியுரிமைச் சான்றிதழ் எதற்காக? பாஜக ஆளும் மற்ற அனைத்து மாநிலங்களிலும் சரியான பாதையில் செல்கிறதா? ஏதாவது ஒன்றை கூறி வருகிறார்கள். தமிழகத்தில் இலவசத்தை தொடக்கத்திலிருந்து வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி எதிர்த்து வருகிறோம். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தான் மக்கள் அரசு, தேர்தல் நேரத்தில் அறிவித்து நாங்கள் வந்தால் இதை வழங்குகிறோம், அதை வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள். ஆட்சிக்கு வந்து இதை தர வேண்டியதுதானே. இதுவும் ஒருவித கையூட்டும் தான்” என்றார்.


பிரதமர் மோடி காங்கிரஸில் பயங்கரவாதிகள் இருப்பதாக பேசியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மொத்த பயங்கரவாதியும் ஆர்எஸ்எஸ், பிஜேபியில் தான் உள்ளார்கள் என்று விமர்சனம் செய்தார். மேலும். ”பாஜக பெண் நிர்வாகிகள் மீது தரைகுறைவாக பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியாக கையாள வேண்டும், பெண்ணை போற்றாத எந்த நாடும் பெருமை அடையாது என்று கூறுகிறார்கள். இந்த விவகாரம் அநாகரீகமானது, வருத்தம் அளிக்கிறது எனத் தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசின் செயல்பாடு கேள்வி கேட்கும் அளவிற்கு உள்ளது எனவும் கூறினார். ஆளுநரை திரும்ப பெற வேண்டுமா என்ற கேள்விக்கு, நாட்டிற்கு ஆளுநரை வேண்டாம் ஏழு பேர் விடுதலைக்கு என்னென்ன பாடுப்படுத்தினார்கள். ஆளுநரின் கையெழுத்து எட்டுகோடி மக்களின் தலையெழுத்தை எழுதுவதா? என்று கூறினார். தமிழகத்தில் முன்பைவிட போதைப் பொருட்கள் விற்பனை கூடியுள்ளது. சட்டம் ஒழுங்கு எந்த அளவில் உள்ளது என்று கேள்வி எழுப்பும் அளவில் உள்ளது என குற்றம்சாட்டினார். 



உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, நாடே தலைகீழாக மாறிவிடும், சிங்கப்பூராக மாறி வந்துவிடும், காலையில் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கிண்டல் அடித்தார். பாஜக யாருடைய காலடியில் நிற்குமே தவிர, அதிமுக யாருடைய காலடியிலும் நிக்காது. பாஜக பெரிய கட்சி என்று கூறுகிறார்கள் தனித்து நிற்க முடியுமா? என்ன கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க முடியுமா? அப்படி இருக்கும்பொழுது, எங்கு தமிழ் வளர்க்கிறீர்கள், பாராளுமன்றத்தில் தமிழ் பேச உரிமை உள்ளதா? எனவும் பல தேசிய இனங்கள் இணைந்து வாழும் நாட்டில் 22 மொழிகள் தேசியமொழியாக இருந்தால் என்ன கெட்டுப் போகப் போகிறதா என்றார். ஆட்கள் மாறும் ஆட்சி மாறும், அமைப்பு மாறாது இதனால்தான் இதை இரண்டை மாற்றி விட வேண்டும் என்று கூறினார். மின்சாரத் துறையில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது அவசியமற்ற ஒன்று. திமுக ஆட்சிக்கு வந்தவுடன்


மாதமாதம் கணக்கு எடுக்கப்படும் என்று கூறினார்கள். தற்பொழுது ஆட்சிக்கு வந்தும் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை தான் கணக்கு எடுக்கப்படுகிறது. ஏற்கனவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது இவ்வளவு கணினி உலகத்தில் டிஜிட்டல் பேசும் திமுக கணக்கெடுப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும். இதனால்தான் மக்களை துன்புறுத்துவது, கொடுமைப்படுத்துவது இதுவெல்லாம் தான் சிக்கல் என்று பேசினார். மேலும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவது உறுதி வெற்றி பெறுவது மட்டும் தான் இலக்கு என்று கூறினார். புதிய கல்விக்கொள்கையை நாம் எதிர்க்கிறோம், ஆனால் திமுக இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இநத இல்லம் தேடி கல்வி திட்டத்திலும் புதிய கல்வி கொள்கை உள்ளது என்று கூறினார். திமுக எட்டு வழிச்சாலையை எதிர்த்தது. ஆனால் தற்பொழுது பயண நேரம் குறைப்பு சாலை என்ற பெயரில் மீண்டும் நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை வேறு இடத்தில் கட்டிக்கொண்டு உள்ளார்கள். குறிப்பிட்ட தேதியில் மதுரையில் கொண்டு வந்து வைத்து விடுவார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.