TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஊக்குவிக்கும் விழாவின் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தவெக விஜயின் பாராட்டு விழா:
தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில், தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து, விருது வழங்கிப் பாராட்டி வருகிறார்.
முதல் கட்டமாக கடந்த 30.05.2025 அன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாவது கட்ட விழா, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நாளை (04.06.2025) நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பின்வரும் மாவட்டங்களில், குறிப்பிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பரபரப்பு:
மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் இந்த பாராட்டு விழாவை முன்னெடுத்து வருகிறார். அப்போது அவர் பேசும் கருத்துகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தான் அண்மையில் நடைபெற்ற முதற்கட்ட நிகழ்ச்சியில் கூட, நீட் தேர்வு குறித்து விஜய் பேசியது பெரும் விவாதத்திற்குள்ளானது. தற்கொலைகள் தவிக்கப்பட வேண்டும், மாணவர்கள் தவறான முடிவுகள் எடுக்கக்கூடாது என விஜய் பேசியதை, மருத்துவமே படிக்க வேண்டாம் என்று விஜய் சொன்னதாக திமுகவினர் பரப்புவதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் விவரித்து வருகின்றனர். இந்நிலையில், நாளைய நிகழ்ச்சியில் விஜய் என்ன பேச உள்ளார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி வாரியாக மாணவர்கள்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகள், கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகள், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகள, நெல்லை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள், திருப்பூரில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகள், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள், தென்காசி மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகள், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் விழுப்புரத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் தமிழ்நாட்டின் 76 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் நாளை விஜயால் கவுரவிக்கப்பட உள்ளனர். இதுபோக, புதுச்சேரியைச் சேர்ந்த 9 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவர்களும் இந்த நிகழ்வில் கவுரவிக்கப்பட உள்ளனர்.