Just In





இரவே விசிட் அடிக்கும் விஜய்..தயாரான பவுன்சர்கள்.. பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு..!
TVK Anniversary: தமிழக வெற்றிக் கழக கட்சியின் ஆண்டு விழா நாளை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழக இரண்டாம் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள விஜய் இன்றே வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆண்டு விழா:
தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை, விஜய் தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. 2026 -ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு என கூறி, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளை விஜய் முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
இந்நிலையில் தான், த.வெ.க இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை போல பிரமாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகுந்த கட்டுப்பாடுகளுடன் சொகுசு விடுதியில் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கலந்து கொள்பவர்கள் யார் யார்?
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, சென்னை அடுத்த மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் நாளை நடைபெற உள்ளது. காலை 7.45 மணிக்கு விழா தொடங்கும் என கூறப்படுகிறது.
கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் உடன், பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் வியூக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். மேலும், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டம் முழுக்க, முழுக்க 2026 தேர்தல் வியூகத்தை மேற்கொள்வதற்கான நிகழ்வாகவே திட்டமிடப்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்கு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
விஜய் வருகை எப்போது?
தமிழக வெற்றி கழகத்தில் தலைவர் விஜய் நாளை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு இன்று இரவே வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்கூட்டியே விழா நடக்கும் இடத்திற்கு விஜய் வருகை புரிந்து, முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெறும் விடுதியில் தங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
பவுன்சர்கள் என கூறப்படக்கூடிய கருப்பு நிற உடைய அணிந்த பாதுகாப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை முதலே அவர்கள் முழுமையாக, நட்சத்திர விடுதியை கட்டுக்குள் கொண்டு வர உள்ளனர்.