1967ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்றும், மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதி எல்லைப் போராட்ட தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்பட்டு தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் ரூபாய் ஒருலட்சம் மதிப்பிலான பொற்கிழி வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.


தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடையே பல்வேறு எதிர்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. எது தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். பலர் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். 




ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டபோது இந்தியாவில் 9 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே இருந்தன. ஆனால், சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்திய மாகாணங்கள், மொழிவாரியாகப் பிரிக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் வைக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் முதன் முதலாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலம் ஒடிசா தான். `ஒடிசாவின் தந்தை' என அழைக்கப்படும் மதுசூதன்தாஸ் தலைமையில் ஒடிசா தனி மாநிலமாகப்  பிரிக்கப்பட வேண்டும் எனப் போராட்டம் நடந்தது. அதன் விளைவாக 1912-ம் ஆண்டில் வங்கத்திலிருந்து பீகாரும் ஒடிசாவும் பிரிக்கப்பட்டு `பீகார் - ஒடிசா' மாகாணம் உருவானது. அதன் பிறகு, 1935-ம் ஆண்டில் ஒடிசா தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டது. ஒடிசா பிரிக்கப்பட்டப்பிறகு, தற்போதைய கர்நாடகா, ஆந்திரா,தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியிருந்த மாகாணமான மதராஸ் மாகாணத்தில் இருந்து மொழி வாரியாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. மதாராஸ் மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக உருவானது ஆந்திரா.


1953-ம் ஆண்டு, டிசம்பர் மாத இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஃபசல் அலி தலைமையில் கே.எம்.பணிக்கர், குன்ஸ்ரு உள்ளிட்டோரை உறுப்பினர்களாகக் கொண்ட `மாநில மறுசீரமைப்பு ஆணையம்’அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் கள ஆய்வு மேற்கொண்ட இந்தக் குழு 1955-ம் ஆண்டு மத்திய அரசிடம் விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.


ஃபசல் அலி கமிஷன் அளித்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்ற மத்திய அரசு சில மாற்றங்களை செய்து 1956-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாநில மறுசீரமைப்புச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டப்படி மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் நிறுவப்பட்டன. சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூர்ரின் தமிழ் பகுதிகளும் இணைக்கபட்டு சென்னை மாகாணம் பிரிக்கபட்டது. இதற்கிடையில் சென்னை மாகாணத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் சங்கரலிங்கனார்.  சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த, ம.பொ.சிவஞானம்., அண்ணாத்துரை, காமராசர், ஜீவானந்தம் உட்பட பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லி அவருக்கு கோரிக்கை விடுத்தனர், இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை. பேரறிஞர் அண்ணா விருதுநகரில் சங்கரலிங்கனாரை சந்தித்தபோது, "அண்ணா! நீங்களாவது என்னுடைய 'தமிழ்நாடு' பெயர் மாற்றுக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்" என்று சங்கரலிங்கனார் கேட்டுக்கொண்டார்.


அவரது கோரிக்கையை காங்கிரஸ் அரசு கடைசிவரை ஏற்கவில்லை அதனால் 76 நாட்கள் வரை உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாரின் உயிர் பிரிந்தது. 1957ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க முதல்முறையாக வெற்றி பெற்று, பேரவையில் நுழைந்தபோது தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தியது. ஆனால் காங்கிரஸ் அரசு செவிசாய்க்கவில்லை. சங்கரலிங்கனாரின் கோரிக்கை நிறைவேற்றப்பட 11 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் 1967-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது தி.மு.க. முதல்வரானார் அண்ணா. 




சங்கரலிங்கனார் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஜூலை 18, 1967 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் " ‘சென்னை மாகாணம்' என்ற பெயரை ‘தமிழ்நாடு' என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்" என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். அப்போது உரையாற்றிய அண்ணா, "இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும் எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். இந்தத் தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழின் வெற்றி; தமிழரின் வெற்றி; தமிழர் வரலாற்றின் வெற்றி; தமிழ்நாட்டு வெற்றி; இந்த வெற்றியில் அனைவரும் பங்குகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார். பிறகு இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சட்டமன்ற அவைத்தலைவர் சி.பா.ஆதித்தனார் அறிவித்தார். மூன்று முறை தமிழ்நாடு என்று அண்ணா கூற சட்டப்பேரவையில் இருந்த அனைவரும் வாழ்க!வாழ்க என்று அரங்கம் அதிர கூறினர். நவம்பர் 23, 1968 அன்று நாடாளுமன்றத்தில் சென்னை மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு' எனும் பெயர் சூட்டுவதற்கான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.


1969 ஜனவரி 14ல் மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு ஆக அதிகாரபூர்வமாக மாறியது. அந்த விழாவின் போது முதலமைச்சர் அண்ணாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. ஆனாலும் உற்சாகமாக கலந்துகொண்டார். அண்ணா செய்த மிகப்பெரிய விஷயங்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது இந்த பெயர்மாற்றம். 


1956 நவம்பர் 1ம் தேதி உதயமான கேரளம் “நவ கேரளம்” என்று கொண்டாடுகிறது. கர்நாடகம் “அகண்ட கர்நாடகம்” என்று விழா எடுக்கிறது. ஆந்திரம் “விசால ஆந்திரம்” என்று ராஜ்ய விழாவாக கொண்டாடுகின்றது. மகாராஷ்டிரம் “சம்யுக்த மகாராஷ்டிரம்”, குஜராத் “மகா குஜராத்” என்று நவம்பர் 1ம் தேதியை மகிழ்ச்சிப் பெறுக்கோடு வரவேற்கின்றது. ஆனால் தமிழ்நாடு மட்டும் எந்த விழாவும் கொண்டாடவில்லை எனவே மாகாணம் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, கடந்த 2019 ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, 110 விதியின் கீழ் கூட்டுறவு, பொதுப்பணித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பல அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.


இந்தநிலையில் தான், மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடந்த 29ம் தேதி அன்று பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழறிஞர்கள் பலர் சந்தித்து, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1ஆம் நாளை 'தமிழ்நாடு நாள்' என்று கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், பேரறிஞர் அண்ணாவால் மதராஸ் மாநிலத்தை 'தமிழ்நாடு' என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பெயர் மாற்றிய ஜூலை 18ஆம் நாளை 'தமிழ்நாடு நாள்' என்று கொண்டாடுவதுதான் பொருத்தமாக இருக்கும் எனத் தெரிவித்து, அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். 


இந்த நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்படவேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்ட நாளான ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்துள்ளது.


தமிழ்நாடு என்ற பெயர்மாற்ற சட்டம் டிசம்பர் 30, 1968 அன்று இந்திய அரசிதழில் பதிப்பிக்கப்படுகிறது. ஒட்டு மொத்த சட்ட நடவடிக்கையுமே "குறிக்கப்பட்ட நாளில்" (appointed day) இருந்து தமிழ்நாடு என்னும் பெயர் நடைமுறைக்கு வரும் என்கிறது. இந்த ஒட்டு மொத்தப் போராட்டத்திலும் நாள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நாள் 1969ஆம் ஆண்டின் தை முதல் நாளான சனவரி 14 மட்டுமே அதனால் ஜனவரி 14ம் தேதியையே தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று கேட்கிறது ஒருதரப்பு.




கர்நாடகா, கேரளா உள்பட மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவான நாளான நவம்பர் 1ஐ தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்கிறது மற்றொரு தரப்பு. இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் இந்தியாவிலிருந்து பிரிந்த தினத்தை கொண்டாடுகிறது. ஆனால், இந்தியா கொண்டாடுவதில்லை. அது போலதான் மெட்ராஸ் மகாணத்திலிருந்து பிரிந்து சென்ற கேரளா, கர்நாடக மாநிலங்கள்  நவம்பர் 1ஐ பிறந்த நாளாகக் கொண்டாடுகின்றன நாம் ஏன் அந்தநாளை கொண்டாட வேண்டும் என்று எதிர்க்கிறது ஒரு தரப்பு.


ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அம்மாநில நாளாகக் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்த நாளாகக் கொண்டாட முடியாது. இன்றைய தமிழ்நாடு மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 52 ஆண்டுகள் ஆகின்றன. முதல்வர் கூறுவதைப் போன்று தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 54 ஆண்டுகளாகின்றன. தமிழ்நாட்டின் வயது என்ன? என்று வினா எழுப்பட்டால், அதற்கான விடை எது? என்ற குழப்பம் ஏற்படும். தமிழர்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காவும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கும்போது இத்தகைய குழப்பங்கள் தேவையற்றவை என்றிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.


யாரும் எதிர்பாராத விதமாக தீர்மானம் இயற்றப்பட்ட நாளான ஜூலை 18 ஐ தமிழ்நாடு நாளாக அறிவித்து தேன் கூட்டில் கை வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. அறிவித்த நாளன்றே எதிர்ப்புகள் ஆரம்பித்துவிட்டன. இதை எப்படி சமாளிக்கப்போகிறார் ஸ்டாலின் என்பது போகப்போகத் தெரியும்.