தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழு தலைவர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். 


தூத்துக்குடி மாநகராட்சியில் முருகேசன் நகர், பிரையண்ட் நகர், விஎம்எஸ் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பல மணி நேரம் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது இந்தப் பணிகளை விரைவுப்படுத்துவதற்கும் சரியான முறையில் பணிகளை முடிப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டது. 




பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்த போது  எம்.பி. கனிமொழி கூறியதாவது, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு மழையின் போதும் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்து பொது மக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மழை நீர் தேங்குவதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே, வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி  மூலமாக பல்வேறு பகுதிகளில் இந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




இதுவரை சுமார் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளை விரைவுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மழை பெய்தால் இந்த பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மின் மோட்டார்கள் மூலம் மழை நீர் அகற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினர்.




ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தான கேள்விக்கு அவர் கூறுகையில், "ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பார்த்துவிட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இன்னும் சரியாக விசாரித்து விட்டு என்னென்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்கு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுப்பார். முன்னாள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பல தரப்பிலிருந்து வரக்கூடிய இந்த கேள்வி நியாயமான கேள்வி. முதல்வர் விசாரித்து தான் எந்த முடிவையும் எடுக்க முடியும்" என கூறினார்.




இதனை தொடர்ந்து தூத்துக்குடி ஜெயராஜ் சாலை, பண்டுகரை சாலை மற்றும் ரயில்வே மேம்பாலம் சந்திப்பு பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ 15 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நம்ம தூத்துக்குடி என்ற செல்ஃபி பாயிண்டை கனிமொழி திறந்து வைத்தார். பின்னர் இதன் முன்பாக அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் செந்தில்ராஜ், ஆணையர் சாருஸ்ரீ, மேயர் ஜெகன் உள்ளிட்டோர் வரிசையாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி உற்சாகத்துடன் செல்ஃபி எடுத்து கொண்டார்.




இப்பகுதி புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம், நகர் பகுதிக்குள் வரும் வாகனங்கள் என எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும், மேலும் செல்ஃபி பாயிண்ட் அருகிலேயே தனியார் மருத்துவமனை உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் செல்லக்கூடிய வாகனங்களில் செல்வோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. 




இது குறித்து தூத்துக்குடி மாவட்ட பாஜக துணைத்தலைவர் வாரியார் கூறும்போது, தூத்துக்குடியின் மையப் பகுதியில் அதுவும் போக்குவரத்து நிறைந்த ஒரு பகுதியில் செல்பி பாயிண்டாக அறிவித்திருப்பது முற்றிலும் தவறான நடவடிக்கை. இருசக்கர வாகனங்களை அதில் நிறுத்தி செல்பி எடுக்க முயற்சிக்கும் போது விபத்து ஏற்பட அதிகப்படியான வாய்ப்பு உள்ளது.




அழகு படுத்தும் முயற்சி ஏற்புடையது தான். ஆனால் அதனை செல்பி பாயிண்டாக அறிவித்திருப்பது முற்றிலும் தவறான நடவடிக்கை. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உடனடியாக இதில் தலையிட்டு அதில் செல்பி எடுக்க தடை விதிக்க வேண்டும். உயிர் பலி ஏற்படும் முன்னால் இதை உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.