தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரையை கடந்த மாதம் 28-ம் தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார். சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.  27-வது தொகுதியாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார்.


பாத யாத்திரை:


அவர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு இருந்து பாதயாத்திரையை தொடங்கினார். அவர் பாளையங்கோட்டை ரோடு, குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, வ.உ.சி சாலை, மார்க்கெட் சாலை, அந்தோணியார் ஆலயம் சந்திப்பு, வி.இ.ரோடு, கான்வென்ட் ரோடு வழியாக சண்முகபுரம் கன்னி விநாயகர் கோயில் சந்திப்பில் மணியளவில் நடைபயணத்தை நிறைவு செய்தார்.




உப்பளத் தொழிலாளர்கள்:


பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை,தூத்துக்குடி முத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. 1961-ம் ஆண்டு முத்து குளிப்பவர்கள் 1500 பேர் இருந்தனர். அதன்பிறகு முத்து குளித்தல் தடை செய்யப்பட்டது. தற்போது 50-க்கும் குறைவானவர்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வூதியம் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க பா.ஜனதா நடவடிக்கை எடுக்கும். தூத்துக்குடி மாவட்ம் தற்போது முத்தில் இருந்து உப்புக்கு வந்து விட்டது. உப்பளம் தொழிலாளர்களுக்கு அரசு சலுகைகளை வழங்கி ஊக்குவித்தாலே போதும். தூத்துக்குடி மாவட்டம் இந்தியாவில் முதல் இடம் பிடிக்கும். தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு தொழில் நன்றாக தெரியும். அவர்கள் குஜராத்தில் இருந்து கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை.




தூத்துக்குடியின் வளர்ச்சி:


தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு கடந்த 9 ஆண்டுகளில் வ.உ.சி. துறைமுகம் வளர்ச்சிக்கு ரூ.7 ஆயிரத்து 164 கோடி, தூத்துக்குடி-நாகப்பட்டினம் இடையே 332 கிலோ மீட்டர் தூர சாலை பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி மதுரை-நாகர்கோவில்-தூத்துக்குடி சாலைக்கு ரூ.1890 கோடி, தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கத்துக்கு ரூ.381 கோடி, தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


தூத்துக்குடியில் வளர்ச்சி பாதையை தடுப்பதே தூத்துக்குடி எம்.பி.யின் செயல்பாடாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் முத்ரா கடன் ரூ.3 ஆயிரத்து 144 கோடி வழங்கப்பட்டு உள்ளது. பாரத பிரதமர் வீட்டு வசதி கடன் திட்டத்தில் 21 ஆயிரத்து 911 குடும்பங்களுக்கு வீடு வழங்கப்பட்டு உள்ளது. சாலையோர வியாபாரிகள் 1 லட்சத்து 80 ஆயிரத்து 27 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.




பின்னோக்கிச் செல்லும் தமிழ்நாடு:


தி.மு.க. அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.96 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளார். இதனை கொண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனர். தி.மு.க. அரசை அகற்ற, தமிழகத்தை குடிகார மாநிலமாக்கிய காரணம் ஒன்றே போதும். கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது.


எந்த புதிய தொழில் நிறுவனமும் தமிழகத்துக்கு வரவில்லை. 5 ஆண்டுகளில் தமிழகத்தை பாலைவனமாக மாற்றிவிடுவார்கள். தன்மானம் இருக்க கூடிய தமிழர்கள் நாம். தமிழகத்தில் மன்னராட்சி, குடும்ப ஆட்சி நடக்கிறது. இதனை மக்கள் விடக்கூடாது. தமிழகத்தில் சத்துணவில் அழுகிய முட்டை போடுவதால் மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் 15 முறை அழுகிய முட்டையால் மாணவர்கள் வாந்தி மயக்கம் எடுத்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.




தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் தூத்துக்குடியின் வளர்ச்சிக்காக எதையும் செய்யாமல், மத்திய அரசின் திட்டங்களை தடுக்கும் வேலைகளை செய்கிறார். கனிமொழி எம்பியை தூத்துக்குடி தொகுதிக்கு உள்ளேயே அடைத்துவிட்டார்கள். இதனால் ஏற்பட்ட கோபத்தை மத்திய அரசு மீது காட்டுகிறார். தனது இருப்பை காட்டுவதற்காக நாடாளுமன்றத்தில் எதையோ பேசுகிறார்.




இனிதான் கச்சேரி


தி.மு.க சார்பில் மீனவர்கள் மாநாட்டை நடத்துகிறார்கள். மீனவர்களுக்கு பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை தந்து உள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் ஒரு மீனவர்கள் கூட மரணமடையவில்லை. தி.மு.க தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.நாடாளுமன்ற தேர்தலில் 5 விதமான பொய் பிரசாரங்களை கூறி மக்களை சந்திக்க வருவார்கள்.


முறியடிக்க நாங்கள் திட்டம் வைத்திருக்கிறோம். தமிழகத்தில் இனிமேல் தான் கச்சேரி ஆரம்பமாகிறது. 3-வது முறையாக பிரதமராக மோடி வர நாடு முழுவதும் 400 தொகுதிகளை வென்றால் போதாது. நாம் வெற்றியின் பக்கத்தில் வந்து விட்டோம். தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வேண்டும். 2024-ஐ இழந்து விடக்கூடாது. தி.மு.கவை வேறோடு சாய்த்து வீச வேண்டும். தூத்துக்குடியில் இருந்து அந்த மாற்றம் வர வேண்டும் என்றார்.




முன்னதாக நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு மக்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பலர் அவருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர். பலர் கோரிக்கை மனுக்களையும் அவரிடம் வழங்கினார். தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பன் கடைக்கு சென்ற அண்ணாலை, அங்குள்ள புத்தகங்களை பார்வையிட்டார். சென்னை சென்றதும் 100 புத்தகங்களை அனுப்பி வைப்பதாக உறுதியளித்த  அண்ணாலை, கடை விரிவாக்க பணிகளுக்கு நிதியுதவும் வழங்கினார்.