திமுகவின் திராவிட மாடல் அரசுக்கு முன்னோடியாக விளங்கியவர் கடவுள் ராமர்-தான் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது திமுகவில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது.


திராவிட மாடலுக்கு முன்னோடி கடவுள் ராமர்-தான் – அமைச்சர் ரகுபதி


தனிப்பட்ட முறையில் ஆன்மிகத்தாஇ பின்ப்பற்றுபவர்களை திமுக தடுப்பதோ விமர்சிப்பதோ இல்லையென்றாலும், திமுக அரசின் முழக்கமான திராவிட மாடலுக்கே முன்னோடி ராமர்-தான் என்று அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலம் கட்ட, ராமர் எந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார்?  என்று கேள்வி எழுப்பி, ராமர் என்ற ஒரு கதாபாத்திரமே கற்பனை என்று சொன்னவர் கலைஞர் கருணாநிதி. கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இயக்கமான திமுகவின் சட்டத்துறை அமைச்சரே பொதுவெளியில் இப்படி பேசியிருப்பது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது


ராம காவியம் குறித்து சிலாகித்து பேசிய அமைச்சர் ரகுபதி


புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் பேசியபோதுதான், இதுபோன்ற கருத்துகளை உதிர்த்திருக்கிறார் அமைச்சர் ரகுபதி. அதில் அவர் பேசும்போது,  ”ராம காவியத்தில் உள்ள நல்ல கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும், ராமயணத்தை வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்தில் பொறுத்தி பார்த்தால், இது எங்களின் திராவிட மாடலுக்கு பொறுத்தமான ஒன்றாக இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக ராமர் இருக்கிறார். தந்தை பெரியாருக்கு, பேரறிஞர் அண்ணாவிற்கு, டாக்டர் அம்பேத்கருக்கு, கலைஞர் கருணாநிதிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னால், இந்த திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்த சென்ற, சமூக நீதியின் காவலராக ராமர் இருக்கிறார். சமத்துவம், சமூக நீதி இவற்றையெல்லாம் போதித்து உலகத்திற்கு எடுத்து சொன்னவர், எல்லோரும் சமம் என்று கருதியவர் ஒரே நாயகன் ராமர். இதை யாரும் மறுக்க முடியாது. மறுப்பதற்கான வாய்ப்பே கிடையாது” என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.


கம்பனை பற்றி பேசப்போய் ராமனை பற்றி பேசிய அமைச்சர் ரகுபதி


திராவிட இயக்கத்தை சேர்ந்த பலரும் கம்பன் கழக விழாவில் பங்கேற்று வருகிறார்கள். அவர்கள் எல்லாம் கம்பனின் புகழையும் பெருமையையும் மட்டுமே பற்றி பேசுவார்கள். ராமாயணத்தையும் ராமனையும் அவர்கள் பெரும்பாலும் எந்த இடத்திலும் தூக்கி பேசியது கிடையாது. காரணம், தனிப்பட்ட முறையில் அவர்கள் கடவுள் பக்தி உடையவர்களாக இருந்தாலும் இயக்கம் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இயக்கம். இயத்தையும் ஆன்மிகத்தை அவர்கள் ஒருபோதும் இணைத்து பேசியாது கிடையாது. ஆழ்வார் ஆய்வு மையத்தை திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனே பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அவர் சொற்பொழிவுகளில் கம்பனை பற்றி புகழ்ந்து பேசினாலும் ராமரை தூக்கி பேசியதில்லை. ஆழ்வார்களின் புகழை பாடினாலும் திராவிட அமைப்புக்கு அவர்கள் முன்னோடிகள் என்றெல்லாம் அவர் உரையாற்றியதில்லை.


ஆனால், ராமாயணத்தை கட்டுக் கதை என்றும் ராமர் ஒரு பொய் கதாபாத்திரம் எனவும் அன்று முதல் இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கும் திமுகவை சேர்ந்த அமைச்சர் ஒருவர், திராவிட மாடலுக்கே ராமர்-தான் முன்னோடி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, கம்பன் கழக விழாவில் கம்பன் பற்றி உரையாற்றாமல், ராமர் குறித்து சிலாகித்து அமைச்சர் ரகுபதி பேசியது ஏன் என்றும் புதுகை மாவட்ட திமுகவில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது. திராவிட மாடலை இணைத்து பேசினால் பாராட்டுவார்கள் என்று யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே விழாவில் அமைச்சர் ரகுபதி பேசிவிட்டதாகவும் கூறப்படுகிறது


அயோத்திக்கு போவேன் – அமைச்சர் ரகுபதி


அதோடு, கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ரகுபதி, அயோத்திக்கும் போவேன். நான் எல்லா கோயிலுக்கும் செல்வேன். அங்கு இருப்பது பாலராமர்தான் என்று தெரிவித்துள்ளார். அதோடு, தான பேசியதற்கு காரணம், சமத்துவமும் சமூக நீதியையும் நிலைநாட்டியாவராக ராமர் கதாபாத்திரம் இருப்பதால்தான் என்றும் அது உண்மையோ பொய்யோ தெரியாது ஆனால் நல்ல கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்