தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்காதவர்களின் பாராட்டையும்கூட இப்போது பெற்று தலைநிமிர்ந்துவருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார்.தமிழக முன்னாள் முதல்வரும், முதல்வர் ஸ்டாலினின் தந்தையுமான மு.கருணாநிதியின் 98வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழக முதல்வராகிவிட்ட நிலையில் தனது உழைப்பை சுட்டிக்காட்டி ஒரு தந்தையின், கழகத்தின் மூத்த தலைவரின், முன்னாள் முதல்வரின் ஆசியைக் கோரும் வகையில் அந்த காணொலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தலைவருக்குக் கொடுத்த வாக்குறுதியை ஒரு தொண்டன் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காகவே உழைத்தேன். நீங்கள் மறையவில்லை, மறைந்து இருந்து என்னைக் கவனிப்பதாகத் தான் எப்போதும் நினைப்பேன். இப்போதும் கவனித்துக் கொண்டுதான் இருப்பீர்கள்...கோட்டையைக் கைப்பற்றிய அடுத்த நாளே கொரோனாவை விரட்டப் போராடிக் கொண்டு இருக்கிறோம். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று என்னை நீங்கள் உருவகப்படுத்தினீர்கள். (இந்த இடத்தில், பின்னணியில் ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றொரு மாநாட்டில் கருணாநிதி பேசிய ஆடியோ ஒலிக்கப்படுகிறது)அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.அன்றொரு நாள் விழுப்புரத்தில் சொன்னீர்கள், யாரிடம் இருந்து பாராட்டு வரவில்லையோ அவர்கள் பாராட்டும் வகையில் நடந்துகொள் என்று. உண்மையில் தலைவரே, தேர்தலில் நமக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் பலரது பாராட்டையும் இப்போது கழகத்துக்கு வாங்கித் தரும் வகையில் செயல்பட்டு வருகிறேன். செயல்படுகிறேன் என்றால் தனிப்பட்ட நானல்ல, என்னுள் இருந்து நீங்கள் தான் செயல்பட வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.உங்கள் சொல் எனக்கு சாசனம். உங்கள் வாழ்க்கை எனக்குப் பாடம். உங்கள் பாராட்டே எனக்கு உயிர்விசை. உங்கள் குரலே எனக்கு தேனிசை.உங்களது வார்ப்பான நான் இந்த ஜூன் 3 உங்களை வெற்றிச் செய்தியோடு சந்திக்க வருகிறேன். 'வாழ்த்துகள் ஸ்டாலின்' என்று சொல்வீர்களா தலைவரே.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக, நெகிழ்ச்சியகாப் பேசியிருக்கிறார். சமூகவலைதளங்களில் இந்தக் காணொலி வைரலாகி வருகிறது.