Senthil Balaji Health: ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவரது  ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். 


அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதன் அடிப்படையில், அவரை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே, உடனே ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என திமுக மூத்த தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். 


இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை (இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய்களில் இருக்கும் அடைப்புகள் குறித்து கண்டறிய செய்யப்படும் பரிசோதனை) செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு ரத்தக்குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள்ளது. 


ஆஞ்சியோ பரிசோதனை தொடர்பாக, மருத்துவமனை சார்பில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”மின்சாரதுறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலஜிக்கு இன்று அதாவது ஜூன் 14ஆம் தேதி காலை 10.40 மணியளவில் ஆஞ்சியோ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது உடலில் முக்கியமான ரத்த நாளங்களில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை - பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அந்த துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பலரும் வழக்கு தொடர்ந்தனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்று காலை முதல் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறை உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்தனர். இதேபோல் செந்தில்பாலாஜியின் கரூர் வீடு உள்ளிட்ட 8 இடங்களிலும் சோதனையானது நடந்தது. 


சுமார் 17 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. தலைமைச்செயலகத்தில் நடந்த சோதனையின் போது 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை 2 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்ற குழப்பம் நிலவிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. 


இதற்கிடையில் அதிகாரிகள் அழைத்து செல்லும்போது செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஓமந்துராரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி,எ.வ.வேலு,  திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் நேரடியாக மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அதன் பின்னர் முதலமைச்சர் மருத்துவமனையில் அமைச்சரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.