Just In





Sattai Duraimurugan Remand: சமூக வலைதளங்களில் வதந்தி : கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் திருவள்ளூர் சிறையில் அடைப்பு..!
பாக்ஸ்கான் நிறுவன போராட்டம் குறித்து வதந்தி பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டதால் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை போலீசார் இன்று திருவள்ளூர் சிறையில் அடைத்தனர்.

சென்னையை அடுத்த தனியார் நிறுவனமான பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரி்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு காரணமாக பலரும் வாந்தி, மயக்கம் எடுத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆலையில் பணியாற்றும் பெண்கள் உள்பட பலரும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான சாட்டை துரைமுருகன் தனது டுவிட்டர் பக்கத்தில், சீன நிறுவனமான பாக்ஸ்கானில் பணிபுரிந்த 57 பெண்கள் நச்சுத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டதால் வாந்தி, மயக்கம். 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று பதிவிட்டார்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் இன்று திருவள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை வரும் ஜனவரி 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த சில மாதங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு, சமீபத்தில்தான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சமூக வலைதளங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பரப்பியதாக புகார் பெறப்பட்டதால் அவரை நேற்று மாலை திருச்சியில் காவல்துறையினர் கைது செய்தனர். அவரது மனைவி மாதரிசி நேற்று நள்ளிரவு திருச்சி துணை ஆணையரிடம் தனது கணவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், காவல்துறையினர் என்று கூறி வந்த 7 பேர் துரைமுருகனை அழைத்துச் சென்று பல மணி நேரம் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகார் அளித்தார். இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் திருவள்ளூர் கிளைச்சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்