BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
பாஜக தமிழ்நாடு தலைவராக சரத்குமார் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தமிழ்நாடு தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவின் அடுத்த தலைவராக சரத்குமார் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தமிழ்நாடு தலைவருக்கு நிலவும் கடும் போட்டி
பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாமல், தொண்டர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தலைவராக இருக்கும் அண்ணாமலையே தொடரப் போகிறாரா, அல்லது புதிய தலைவரை பாஜக தலைமை தேர்ந்தெடுக்குமா என்ற கேள்வி இருந்த நிலையில், அண்ணாமலையேதான் தொடர வாய்ப்புள்ளதாகவும், மேலிடமும் அதையே விரும்புவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே, தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட சீனியர் தலைவர்களும் களத்தில் குதித்து, தலைவர் ஆவதற்கு தங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால், அது எதுவும் எடுபடாமல் போகவே, அடுத்த தலைவர் யார் என்ற குழப்பமே நீடித்து வருகிறது.
இதனிடையே, கடந்த காலங்களில் பாஜக தலைவர்களாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் போன்றோர், இரண்டாவது முறையாகவும் தலைவர்கள் ஆகியிருக்கிறார்கள். அதனால், அண்ணாமலையை தான் மீண்டும் தமிழக தலைவராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
குறுக்கே வந்த நாட்டாமை.. கடுப்பில் சீனியர்ஸ்
இப்படி, பாஜக தலைவர் பதவிக்கு பலமுனைப் போட்டி நிலவிவரும் வேளையில், பாஜக தொண்டர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று ஏற்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் என பலர் போட்டியில் இருக்க, சத்தமில்லாமல் குற்றுகே புகுந்துள்ளார் நமது நாட்டாமை சரத்குமார். ஆம், சரத்குமாரை பாஜக தமிழ்நாட்டின் புதிய தலைவராக நியமிக்க டெல்லி தலைமை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானதால், தற்போது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, தூங்கிக்கொண்டிருக்கும் போது, தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்று தோன்றியதன் அடிப்படையில், கட்சியை கலைத்துவிட்டு, பாஜகவில் சாதாரண உறுப்பினராக இணைந்தார் சரத்குமார். ஆனால் அவருக்கு பொறுப்புகள் எதுவும் பாஜகவில் வழங்கப்படவில்லை. அதே நேரம், அவரது மனைவி ராதிகா விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியிருந்தது.
சரத்குமார் கட்சியில் இணைந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் இருப்பது அவரது ஆதரவாளர்கள் இடையே அதிருதிப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தான், அண்ணாமலைக்கு எதிராக வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கிவருவதால், அவர்கள் இருவரையும் கழற்றிவிட்டுவிட்டு, தமிழக பாஜக தலைவராக சரத்குமாரை நியமிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், கமலாலய சீனியர்களை கடுப்பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக தமிழ்நாடு தலைவர் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என தெரியவில்லை. ஆனால், அதற்குள் அனைவரது பெயரும் அடிபட்டுவிட்டது. ஆனால், இந்த முறை புதிதாக சரத்குமார் பெயர் அடிபட்டிருப்பது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்தான். அப்படியானால், அண்ணாமலையின் கதி என்ன என்பதுதான் தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.