Anbumani Ramadoss: அன்புமணி கூசாமல் பொய் பேசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு:

அண்மையில் தருமபுரியில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்தேன். தூக்கமே இல்லை. நான் என்ன தவறு செய்தேன்? என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் ஏன் மாற்றப்பட்டேன்? அப்படி என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை” என பேசியிருந்தார். இந்நிலையில் தான், விழுப்புரத்தில் தைலாபுரத்தில் உள்ள வீட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

”தகுதியற்ற அன்புமணி”

ராமதாஸ் பேசுகையில், “தவறு செய்தது அன்புமணி அல்ல. அவரை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன். தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆடியது அன்புமணி தான். புதுச்சேரி பொதுக்குழுவில் நடந்தது என்ன  என்று உலகமே பார்த்தது. மேடை நாடகத்தை கடைபிடிக்காதது யார்? அன்புமணியின் குற்றச்சாட்டுகள் முழுக்க மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பும் செயல். தலைமைப் பண்பு அன்புமணிக்கு கொஞ்சம் கூட இல்லை.

”தாயை தாக்கிய அன்புமணி”

ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனின் நியமனத்தை அன்புமணி கிழித்து போட்டார். முகுந்தன் விவகாரத்தில் தனது தாய் மீது பாட்டிலை வீசி அன்புமணி தாக்கினார். வளர்த்த கிடாவே மார்பில் எட்டி உதைத்துவிட்டது. இப்போது என்னை குற்றவாளியாக்கி அனுதாபம் தேட அன்புமணி முயல்கிறார். சுவற்றுக்குள் பேச வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்? கட்டுக்கோப்பாக நடத்திவந்த கட்சியை அன்புமணி அவமானப்படுத்திவிட்டார்.

 

”நான் அன்றே செத்துவிட்டேன்”

மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தேன். ஆனால், அன்புமணி ஒவ்வொருவரையும் தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசி, என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்க நிறுவனர் முயல்கிறார். எனவே யாரும் அந்த கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தினார். இதனால், அந்த கூட்டத்திற்கு மொத்தமுள்ள சுமார் 108 தலைவர்களில் வெறும் 8 பேர் மட்டுமே வந்திருந்தனர். அதனை கண்ட பிறகு அன்றே நான் இறந்துவிட்டேன்” என ராமதாஸ் வேதனையுடன் பேசினார்.

தொடரும் மோதல்:

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. புதுச்சேரி பொதுக்குழுவில் அவர்கள் இடையேயான மோதல் பகிரங்கமான நிலையில், அன்புமணி வகித்து வந்த தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாக ராமதாஸ் அறிவித்தார்.  ஆனாலும், தானே தலைவராக தொடர்வதாக அன்புமணி தெரிவித்தார். இந்நிலையில் தான், அவர் மீது ராமதாஸ் பகிரங்கமாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.