புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது; யூனியன் பிரதேச அந்தஸ்தே தொடரும் என முதல்வர் ரங்கசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.


மாநில அந்தஸ்து


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது, யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே 13 முறை புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. மத்தியில் பா.ஜ.க. அரசு இருப்பதால் புதுவையில் இந்த கூட்டணி ஆட்சியின்போதே மாநில அந்தஸ்து கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஆட்சியாளர்கள் மத்தியில் இருந்து வந்தது.


14வது தீர்மானம்


இதனிடையே கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது புதுவை சட்டசபையில் மாநில அந்தஸ்து தீர்மானம் அனைத்துக்கட்சி ஆதரவுடன் 14வது முறையாக ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்ப காலதாமதமானது. இதற்கு ஆளுநர்தான் காரணம் என்று அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின.


ஆனால் கடந்த ஜூலை 22-ந்தேதி இந்த தீர்மானம் ஆளுநர் மாளிகைக்கு வந்ததாகவும், விடுமுறை தினமாக இருந்த போதிலும் 23-ந் தேதி கையெழுத்திட்டு அதற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.


சர்ச்சை


பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே மாநில அந்தஸ்து தொடர்பான மசோதா, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி அரசின் தீர்மானத்துக்கு பதில் அளித்து மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடித்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மாநில அந்தஸ்து கிடையாது, புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பதில், புதுச்சேரி ஆட்சியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் கூறுகையில், ’’புதுச்சேரி சட்டமன்றத்தில் மாநில அந்தஸ்து கோரி 2022- 23 ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு தற்போது நிலை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். தொடர்ந்து அனைத்து எம்எல்ஏக்களும் டெல்லி சென்று, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் மாநில அந்தஸ்து கிடைக்க வலியுறுத்துவோம்’’ என சபாநாயகர் தெரிவித்தார்.