மதுரை மாநகர் 14-வது வட்ட தி.மு.க.,  சார்பில் புதூர் பேருந்து நிலையப் பகுதியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா என்ற முப்பெரும் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் , மாவட்ட செயலாளர் கோ.தளபதி, மேயர் இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டனர்



இக்கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..,”கடந்த அண்டு நிதியில் எப்படி சாதனையை படைத்தோமோ அதே போல வரும் ஆண்டும் நிதியில் ஒரு முன்னேற்றத்தை காண்போம். படித்தவர்கள் சிந்தனையுள்ளவர்கள் சரியான இடத்தில் இருந்தால் தான் உரியவர்கள் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தால் ஒரு சிறப்பான இடத்தை அடையலாம். பேராசிரியர் அன்பழகன் எனக்கு தந்தை போன்றவர், என்னை தனியாக அழைத்து நீண்ட நேரம் அறிவுரை கூறுவார். இருக்கும் தொழிலை சிறப்பாக செய்து தனி அடையாளத்தை நிருபித்துவிட்டு அரசியலுக்கு வாருங்கள் என  கூறிய வார்த்தையின் படி நான் பல வங்கிகளில் பணியாற்றி பொருளாதார முன்னேற்றம் அடைந்த பிறகு தான் நான் அரசியலுக்கு வந்தேன்.



உதயநிதியை அசையும் சொத்து என நான் ஏன் கூறினேன் தெரியுமா என கூறிய நிதியமைச்சர் திமுகவின் சராசரி உறுப்பினரின் வயது  மக்களின் சராசரி வயதை விட அதிகமாக உள்ளது. திமுக மூத்த அமைச்சர்கள் 70 முதல் 75 வயதுடையவர்களாக உள்ளனர். இதனால் வயது வித்தியாசத்தை குறைக்கும் வகையில் ஒரு இளைஞர் பொறுப்புக்கு வருவது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என்கிற வகையில் உதயநிதி அமைச்சாரகியுள்ளார். இதனால் கட்சியின் அசையும் சொத்து என கூறினேன். என்னோடு பாசத்தோடு பரஸ்பர உரிமையோடு நெருங்கி பழகுபவர் உதயநிதி, அண்ணன் என்ற முறையில் அவருக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வகையில் உதவி செய்வேன். உண்மையாக மதத்தை பின்பற்றுபவர்கள் எல்லா மத்தினரோடும்  பாசத்தோடும் அன்போடும் இருக்க வேண்டும், நல்ல மதத்தை பின்பற்றுபவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும், அடுத்தவரை நேசிக்க வேண்டும்.



பதவி வரும் போகும் வரும். பொறுப்பு இன்று வரும், நாளை 10 சீட்டுகள் கூட கிடைக்காத கட்சியாக  மாறலாம், ஆனால் மனிதனின் அன்பு பாசத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும், உலகில் எனக்கு எத்தனை பதவி வந்தாலும் நான் பி.டி.ஆரின் மகன் என்பதே பெருமை என் அடையாளம், அதற்கு  மேல் யாராலும் எனக்கு எந்த பபதவியும் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாத என பேசினார். எல்லா மதத்தின் நல்ல கருத்தையும் பின்பற்றுபவன் நான், அனைத்து மதத்தினரோடு பாசத்தோடு அன்போடும்  இருக்க வேண்டும், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர்கள் ஓடுக்கப்பட்டவர்களோடு சம வாய்ப்போடு அன்போடு பழக வேண்டும். உரிமை கொடுக்க வேண்டும் என பேசினார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.