தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நவம்பர் 23 ஆம் தேதி மியாட் மருத்துவமனை நிர்வாகம் விஜயகாந்த் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 


அதில், “விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டது. 


இப்படியான நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என நேற்று (நவம்பர் 29) காலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ’விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது' என கூறப்பட்டது. இதனால் தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 


இதனிடையே விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். இந்நிலையில் விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா நேற்று இரவு சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். 


அதில், “தேமுதிக சொந்தங்களுக்கும், கேப்டன் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று (நேற்று) காலை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த அறிக்கை, வழக்கமான அறிக்கை தானே தவிர அதில் பதற்றப்படவோ, பயப்படமோ ஒன்றும் இல்லை. கேப்டன் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சிறந்த முறையில் இங்கு மருத்துவ நிர்வாகம், மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் நானும் இருந்து தலைவரை நல்ல முறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


வெகு விரைவில் தலைவர் அவர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பி உங்கள் அத்தனை பேரையும் சந்திப்பார் என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன். அத்தனை பேரின் பிரார்த்தனையும், அவர் செய்த தர்மமும் நிச்சயம் தலைவரை காப்பாற்றும். எனவே கடைக்கோடியில் இருக்கும் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் பயப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கண்ணும், கருத்துமாக தலைவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பூரண நலம் பெற்று அவர் வீடு திரும்புவது எப்போது என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறோம். வதந்திகளை நம்ப வேண்டாம்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.