கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், இரு தரப்பிடையே மாற்று கருத்து நிலவியடைதையடுத்து, பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைய மறுத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை, அவரும் ட்விட்டரில் உறுதி செய்தார். இதனை தொடர்ந்து, ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. 2023-ஆம் ஆண்டு வரஇருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், 3 நாள் ‘சிந்தனை அமர்வு’ (சிந்தன் ஷிவிர்) மாநாடு உதயப்பூரில் 13ந்தேதி தொடங்கி 15ந்தேதி வரை நடைபெற்றது. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் உதய்பூரில் விவாதிக்கப்பட்ட ஆறு விவகாரங்களில் 20முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டு வெளியிடப் பட்டது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட நாடு முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



ஒடுக்கப்பட்ட மக்களை வலுப்படுத்துவது 50 வயது குறைவானவர்களுக்கு கட்சியில் 50 சதவிகித பதவிகள் ஒதுக்கப்படுவது போன்ற அறிவிப்புகள் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் மாநாடு குறித்து பிரசாந்த் கிஷோரிடம் கருத்து கேட்கப்பட்டுவந்தது. இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட அவர், மாநாடு முற்றிலும் தோல்வி அடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.


"உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு எந்த விதமான விளைவை ஏற்படுத்தும் என என்னிடம் தொடர்ந்து கருத்து கேட்கப்பட்டுவந்தது. தற்போதிருக்கும் நிலைமை மேலும் தொடர வழிவகுத்ததை தவிர்த்து அந்த அமர்வு வேறு எதுவும் சாதிக்கவில்லை. தோல்வியடைந்துவிட்டது. அது மட்டுமின்றி, குஜராத், இமாச்சல் தேர்தலில் படுமோசமான தோல்வியை சந்திக்கும் வரை அது காங்கிரஸ் தலைமைக்கு அவகாசம் வழங்கியுள்ளது. இதுவே எனது பார்வை" என்றார்.






இதே ஆண்டில், பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே இடையே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இரண்டும் கடைசியில் தோல்வியிலேயே முடிவடைந்தது. பேச்சுவார்த்தையின்போது, காங்கிரஸ் கட்சிக்காக பிரசாந்த் கிஷோர் வகுத்த தேர்தல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிகாரம் பெற்ற செயற் குழுவின் உறுப்பினராகி கட்சியில் சேர்ந்து பணியாற்றும்படி தலைமை பிரசாந்த் கிஷோரிடம் கேட்டு கொண்டது. ஆனால், அதற்கு அவர் ஒப்பு கொள்ளவில்லை. கட்சியின் விதிகளின்படி, இம்மாதிரியான குழுவுக்கு அதிகாரம் கிடையாது என்றும் அப்படி சேர்ந்தால் இறுதியில் காங்கிரஸின் உட்கட்சி பூசலில் சிக்கிவிடுவேன் எனக் கூறி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.