தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு முழக்கங்களை எழுப்பினர். எதிா்க்கட்சித் தலைவா் தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் இன்று நடைபெறும் என தலைமை அறிவித்திருந்தது.



 

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அறிவுறுத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றபோது போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அதிமுகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அதிமுகவினர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.



 

 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

 

தொடர்ந்து கைது செய்யப்பட்ட அதிமுகவினர் அனைவரையும் எழும்பூரில் உள்ள ராஜரத்தின மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல், எம்.எல்.ஏக்கள் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினோம். கோரிக்கையை 2 மாதங்களாக சபாநாயகர் கிடப்பில் போட்டார்.



 

எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அதிமுக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அந்த மரபுகளையும், மாண்பையும் மீறி சபாநாயகர் வேண்டுமென்றே திட்டமிட்டு நாங்கள் வைத்த கோரிக்கைய நிராகரித்தார். இது கண்டிக்கத்தக்கது. உதாரணத்திற்கு நான் நேற்றைய தினமே இந்த செய்தியை ஊடகத்தில் வாயிலாக தெரிவித்தேன். இன்றைக்கு ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டு வழங்கிய அடிப்படையில்தான் முடிவு எடுத்தேன் என்று சட்டப்பேரவை தலைவர் சொல்லுகிறார். அது அன்றைய தினம். இன்றைய தினம் முற்றிலுமாக மாறிவிட்டது.



 

பெரும்பான்மையான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் செயலாளரை நியமித்து கொடுத்து இருக்கிறோம். ஆனால், நீங்கள் மாற்றி அமைத்து கொடுத்திருக்க வேண்டும் அதுதான் மரபு. அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சியால் அடிப்படை பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை எப்படி எதிர்க்கட்சி துணை தலைவராக அறிவிக்க முடியும். அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சியை எதிர்கொள்ள தெம்பு, திராணி இல்லாத திமுக தலைவர் ஸ்டாலின் இதை சாதகப்படுத்தி கொண்டார்.

 

நேற்று சட்டமன்றம் முடிந்தபிறகு ஸ்டாலினும்- ஓ.பி.எஸ்ஸும் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். திமுகவின் ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எதிர்க்கட்சியை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறார். அதிமுகவை சிதைக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது' என தெரிவித்தார்.