தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் , திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5 , 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் தற்போது வரை போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் பாமக பொருளாளர் திலக பாமா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திலகபாமா ;
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு திமுக அநீதியை இழுத்துக் கொண்டிருக்கிற இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். திமுக அரசு தான் வாக்கு கொடுத்திருக்கிறது தூய்மை பணியாளர்களை நாங்கள் நிரந்தரம் செய்வோம் என்று ஆனால் அவர்களுக்கு நிரந்தர பணியினை வழங்க மறுக்கிறது. இந்த பேச்சு வார்த்தை என்பது மேயர் பிரியா ஆணையர் குமரகுருபரன் உடன் தான் நடைபெற வேண்டும். ஆனால் தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் சேகர்பாபு ஏன் பங்கேற்றார். சேகர் பாபு பேச்சும் அவருடைய முகபாவனையும் எந்த அளவுக்கு இருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.
எச்சரிக்கை கொடுத்த திலகபாமா
ஏழாம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. தூய்மை பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம், தீர்வு கிடைக்கவில்லை என்றால் ரிப்பன் மாளிகையில் டிராக்டரில் கொண்டு வந்து குப்பையை கொட்டி விடுவேன். தனியார் தொழிலாளர் வைத்து அள்ளிக் கொள்ளுங்கள்.
டாக்டர் ராமதாஸ் தலைமையில் மயிலாடுதுறையில் நடைபெறும் பாமக மகளிர் மாநாட்டிற்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு ;
இந்தக் கேள்வியே தவறு , மாநாட்டை விட தூய்மை பணியாளர்களின் போராட்டம் தான் முக்கியம் , எனவே தலைவர் என்னை இங்கு அனுப்பி உள்ளார். பின்னர் திலகபாமா தொலைபேசியில் அன்புமணி ராமதாஸ் தூய்மை பணியாளர்களுடன் பேசி ஆதரவு தெரிவித்தார்.