இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசிய கருத்துகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், தான் முஸ்லீம்களை குறிப்பிட்டு பேசவில்லை என்றும் சட்டவிரோத குடியேறிகள் பற்றி மட்டுமே பேசியதாக பிரதமர் விளக்கம் அளித்தார்.


பொதுக்கூட்டங்களில் தொடர் சர்ச்சை கருத்துகள்:


தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த நேர்காணலில், "முஸ்லீம்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தைப் பற்றியும்தான் பேசினேன்" என்றார்.


 



இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அதிக குழந்தைகளை உடையவர்களை பற்றி ஒருவர் பேசும் போதெல்லாம், அவர்கள் முஸ்லீம்களை பற்றி பேசுகிறார் என்று உங்களுக்கு யார் சொன்னது? முஸ்லீம்களுக்கு ஏன் இவ்வளவு அநியாயம் செய்கிறீர்கள்?


ஏழைக் குடும்பங்களிலும் இதுதான் நிலைமை. சமூக நிலையை பொருட்படுத்தாமல் பார்த்தால், வறுமை நிலவும் குடும்பத்தில் எல்லாம் அதிகமான குழந்தைகள் உள்ளனர். நான் இந்து அல்லது முஸ்லீம் என்று குறிப்பிடவில்லை" என்றார்.


முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பதாக காங்கிரஸ் மீது விமர்சனம்:


கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பின. "மக்களின் தங்கம், சொத்துக்களை பறித்து, அதிக குழந்தைகள் உடையவர்களுக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது" என பிரதமர் பேசியிருந்தார்.


மோடியின் யூடியூப் சேனலில் இந்த உரை பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் பேசியது பின்வருமாறு, "நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு என்று காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது. தனிநபர்களின் சொத்துக்கள், நம் பெண்களுக்கு சொந்தமான தங்கம், பழங்குடியின குடும்பங்களுக்குச் சொந்தமான வெள்ளி, அரசு ஊழியர்களின் நிலம் மற்றும் பணம் ஆகியவற்றைக் கண்டறிந்து மறுபங்கீடு செய்ய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.


 



நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் சொத்துக்களையும் அரசாங்கம் பறிப்பதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா? தேசத்தின் வளங்கள் மீது முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு என 2006 ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார்.


பிற பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்துகள்:


அதாவது அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கொண்டவர்களுக்கும் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்படும் என காங்கிரஸ் கூறுகிறது. இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?" என பிரதமர் பேசியுள்ளார்.


இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதாகவும் பிளவுவாத அரசியலை மேற்கொள்வதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.


முஸ்லீம்களைப் பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கூறியதாகவும் தேர்தல் விதிகளை மீறியதாகவும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது. ஆனால், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், "இந்துக்கள், முஸ்லிம்கள் பற்றி பேசியதில்லை.


நான் இந்து - முஸ்லிம் அரசியல் செய்யத் தொடங்கும் நாளில், பொது வாழ்க்கையில் இருக்க எனக்கு தகுதி இருக்காது. நான் இந்து-முஸ்லிம் அரசியலை மேற்கொள்ள மாட்டேன். இது என்னுடைய உறுதிமொழி" என்றார்.


இந்து - முஸ்லிம் என்ற அடிப்படையில் தான் ஒருபோதும் பேசியதில்லை, பேசவும் மாட்டேன் என்று நேர்காணல் அளித்துவிட்ட அடுத்த நாளே மகாராஷ்டிரா நாசிக் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை மீண்டும் பேச தொடங்கியுள்ளார்.


காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த மோடி, "கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசாங்கம் இந்தியாவின் மொத்த பட்ஜெட்டில் 15 சதவீதத்தை முஸ்லிம்களுக்காக செலவிட விரும்பியது. தன்னுடைய கட்சிதான் இதைத் தடுத்து நிறுத்தியது" என்றார்.


மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் நகரில் நடைபெற்ற மற்றொரு பொதுக்கூட்டத்தில், "காங்கிரஸுக்கு வாக்களித்தால், அது மதத்தின் அடிப்படையில் இரண்டு பட்ஜெட்களைத் தயாரிக்கும். பட்ஜெட்டை 'இந்து பட்ஜெட்' மற்றும் 'முஸ்லீம் பட்ஜெட்' என்று பிரிக்க நான் அனுமதிக்க மாட்டேன், மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்" என்றார்.


பிரதமர் மோடி மட்டும் இன்றி பாஜகவின் பிற தலைவர்களும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருகின்றனர்.  மேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பாஜகவுக்கு வாக்களித்தால், மம்தா பானர்ஜியின் குண்டர்களை தலைகீழாக தொங்கவிடப்பட்டு தோலுரிப்பேன்" என்றார்.


மோடி, அமித் ஷா வரிசையில் சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்படும்" எனக் கூறியுள்ளார். அம்ரோஹாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டு மீண்டும் ஒரு முறை பொய்யான தேர்தல் அறிக்கையுடன் உங்களிடம் வந்துள்ளனர்.


காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள், அவர்கள் ஆட்சி அமைத்தால் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என்று சொல்கிறார்கள்" என்றார்.


இந்து, முஸ்லிம் விவகாரம் குறித்து பிரதமர் மோடியும் பிற பாஜக தலைவர்களும் பல பொதுக்கூட்டங்களில் பேசியது இதன் மூலம் தெளிவாகிறது.



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக logicallyfacts என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.