இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடத்தப்பட்டு வருகிறது.


கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி கடுமைாக முயற்சித்து வருகிறது.


இறுதிகட்டத்தை நோக்கி மக்களவை தேர்தல்: ஆனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதவரை 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. 420க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் நடந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், நாளை மறுநாள் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.


ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் பாஜக அங்கு மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக, 2019 மக்களவை தேர்தலில் 10 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி இருந்தது.


கடந்த 2 தேர்தல்களை போல் இந்த முறையும் மாபெரும் வெற்றியை பெற பாஜக தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், மகேந்திரகர் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, "அடுத்த ஐந்தாண்டுகளில் பிரதமர்களாக ஐந்து பேர் பதவி வகிப்பது குறித்து இந்தியா கூட்டணி பேசி வருகிறது" என்றார்.


இந்தியா கூட்டணி மீது கடும் தாக்கு: இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மாடு இன்னும் பாலே தரவில்லை. ஆனால், இந்தியா கூட்டணி தலைவர்கள் நெய்க்காக சண்டையிட்டு வருகின்றனர். நான் உயிருடன் இருக்கும் வரை தலித்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.


நீங்கள் நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தையும் நீங்கள்தான் தீர்மானிக்க போகிறீர்கள். ஒருபுறம் நீங்கள் முயற்சி செய்து சோதித்து பார்த்த சேவகனாக நான் இருக்கிறேன். மறுபக்கம் யாரென்று தெரியவில்லை" என்றார்.


ஹரியானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக ஹரியானா மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.


ஹரியானா அரசியல் சூழல்: கடந்த 2014ஆம் ஆண்டு, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்த நிலையில், 2019ஆம் ஆண்டு அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.


ஏற்கனவே முதலமைச்சராக பதவி வகித்து வந்த மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகவும் ஜனநாயக ஜனதா கட்சியின் நிறுவனர் துஷ்யந்த் சவுதலா துணை முதலமைச்சராக பொறுப்பேற்றனர். அங்கு, நான்கரை ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது.


மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் இரண்டு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்தது. இதனால், பாஜக அரசுக்கான தனது ஆதரவை ஜனநாயக ஜனதா கட்சி திருமப்பெற்றார். இதையடுத்து, மனோகர் லால் கட்டார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


புதிய முதலமைச்சராக பாஜகவின் நைப் சிங் சைனி பதவியேற்றார். ஹரியானா அரசியலில் தொடர் பதற்றம் நிலவி வந்த நிலையில், பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேட்சைகளும் திரும்ப பெற்றனர். இதனால், 90 இடங்கள் கொண்ட ஹரியானா சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 40ஆக குறைந்தது.