வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று (ஜூலை.05) விசாரணைக்கு வந்தது.


தனி நீதிபதியை அணுகிய ஓபிஎஸ்


அதில் அதிமுக பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் 15 நாள்களுக்கு முன்பே வழங்கப்பட வேண்டும் என்றும், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடப்பதாக நேற்று மாலை தான் தனக்கு அழைப்பிதழ் வந்ததாகவும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோர தனி நீதிபதியை அணுகுமாறு ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தனி நீதிபதி முன் ஓபிஎஸ் முறையிட்டார்.


இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் மனுவை அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.


மேலும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழுக்கூட்டத்துக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட அழைப்பிதழை ஓபிஎஸ் வீட்டில் இருந்தவர்கள் வாங்கினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பொதுக்குழுவில் பங்கேற்க ஓ. பன்னீர்செல்வத்துக்கு பொருளாளர் என்ற முறையில் பங்கேற்பாரா என அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.


முன்னதாக அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்தி வைக்குமாறு ஓபிஎஸ் வைத்த கோரிக்கையை ஏற்று ஜூலை 7ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோர தனி நீதிபதியை அணுகுமாறும் ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


ஈபிஎஸ் தரப்பு வாதம்


முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில் மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என ஈபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்தது.


இதனையடுத்து, பழைய உத்தரவு பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட பழைய உத்தரவுகள் அனைத்தும் 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.


மீண்டும் பொதுச் செயலாளர் பதவி


வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுவில் அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 


பொதுக்குழு அன்று அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படவுள்ளதாக முன்னதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்


ஒற்றைத் தலைமை போட்டி


அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர மற்ற எந்தத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால்,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.


இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார்,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.