கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் மண்டல தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை நெல்லையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தை பார்வையிட்டார்,




அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அடுத்த மூன்று மாதத்தில் தமிழகத்தில் நிர்வாக ரீதியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி மாவட்டங்களில் 19 இடங்களில் புதிய கட்சி அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட இருக்கிறது, தமிழகத்தில் உள்ள பாஜகவின் 60 மாவட்டங்களிலும் சொந்தமாக கட்சி அலுவலகம் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும் எனவும் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படைவாதிகள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வந்ததாகவும் இலங்கை கொழும்பு குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இருப்பதாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். தற்போதும் தமிழகத்தில் அடிப்படைவாதிகள் இயங்கி வருகின்றனர், தமிழகத்தில் காவல்துறை பணிசெய்ய தமிழக அரசு அனைத்து வழிகளையும் செய்ய வேண்டும், தமிழக அரசு உதவி ஆய்வாளர்களுக்கு போதிய அதிகாரம் கொடுக்கவில்லை, இதுவரை பார்த்திராத பல்வேறு வழக்குகளை தற்போது தமிழகம் சந்தித்து வருகிறது என தெரிவித்தார். தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்க எல்லாவிதமான சூழ்நிலையும் இருக்கிறது, அதனால் தமிழக அரசு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். 




”39 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினியை 65 ஆயிரம் பணம் கொடுத்து அரசு வாங்கியுள்ளது. எல்காட் நிறுவனத்தை மீறி தனியார் நிறுவனத்திடம் 40 -50% லாபத்திற்கு மடிக்கணினியை வாங்குகிறது. தமிழகத்தில் தவறுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் எந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க பாஜக தயார் நிலையில் உள்ளது. நகர்ப்புற தேர்தலுக்காக பாஜக கோட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


உள்ளாட்சி தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்து 6 மாத காலத்தில் வருகிறது. உள்ளாட்சி தேர்தலை பாஜக கட்சியை வளர்க்க வாய்ப்பாக பார்க்கிறது. அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என சொல்லவில்லை, ஆளும் கட்சியின் பண பலம், படை பலம் ஆகியவையும் உள்ளது. உள்ளாட்சி தேர்தலை பாஜக கட்சி பரிட்சைய களமாக பார்க்கிறது. திமுக ஆட்சியை 6 மாதங்களுக்கு முன்பு காரம், இனிப்பு, கசப்பு என கூறினேன், இப்போது திமுக ஆட்சியை கமிஷன் என சொல்கிறேன்.


திமுக அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டது. தமிழகத்தில் கமிஷன், கரப்ஷன் ஆகியவை தலை தூக்கி வருகிறது. பள்ளிகளுக்கு சிறுகுழந்தைகள் செல்வதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒமிக்கிரான் தாக்கம் தெரியாமல் பள்ளிகள் திறப்பது சரியா என ஆராயவேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி ஒரே கப்பலில் பயணம் செய்கிறது. கப்பல் நன்றாக நேராக போய் கொண்டிருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி திமுக காங்கிரஸ் கூட்டணி போன்று இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைத்துகொண்டால் மக்கள் வாக்களிக்கும்போது சின்னத்தை பார்த்து குழம்பாமலாவது இருப்பார்கள். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ் கட்சியின்தன்மையே இல்லை, திமுகவின் பி டீமாக தான் தமிழக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. இப்போது காங்கிரஸ் விவசாய பிரிவினர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக சொல்வதை போல இன்னும் சில தினங்களில் தமிழக காங்கிரஸ் தலைவரும் எழுதுவார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே கிடையாது. காமராஜருக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் வந்தது கிடையாது” என விமர்சித்தார்