நாடாளுமன்றத் தேர்தல் வருவதையோடி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக இன்று தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


திமுக - மதிமுக இடையே நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு இயற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தையின் போது மதிமுக தமிழகத்தில் திருச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, விருதுநகர், கடலூர், ஈரோடு ஆகிய ஆறு நாடாளுமன்ற தொகுதிகள் அடங்கிய விருப்பப்பட்டியலை மதிமுக வழங்கி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் ஈரோடு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ், "திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இரண்டு மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க திமுகவிடம் கேட்டுள்ளோம் என்றார். மேலும் மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி சின்னத்தில்தான் கண்டிப்பாக போட்டியிடுவோம். மதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. இது குறித்து திமுக குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்று கூறினார்.


இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை திமுக நிறைவு செய்துள்ளது.