மயிலாடுதுறையில் அதிமுக ஓபிஎஸ் அணியினரின் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக (ஓபிஎஸ் அணி) கொள்கைபரப்பு செயலாளர் புகழேந்தி கலந்துகொண்டு கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசுதொகுப்பில் அரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்புதுண்டு, பணம் ஆகியவை வழங்கப்படட்து. ஆனால் திமுக அரசு ஆயிரம் ரூபாய் பணம் மட்டுமே வழங்கியுள்ளது.
ஓபிஎஸ் 21ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் போட்டதும், போட்டியாக இபிஎஸ் 27 -ஆம் தேதி ஒரு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். எதற்காக அந்த கூட்டத்தை நடத்தினார் என்று அவருக்கே தெரியவில்லை. அதிமுகவை காப்பாற்றுகின்ற இடத்தில் ஓபிஎஸ் இருக்கிறார். அதிமுகவை உடைத்து இபிஎஸ் என்ன லாபம் காணுகிறார் என்று தெரியவில்லை. பழனிச்சாமி திமுக அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த வழக்கிலும் கைது ஆகாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
கொடநாடு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் அவர்மீது நிலுவையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜர் மீது கொடுக்கப்பட்ட பருப்பு கொள்முதல் ஊழல் குறித்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரேஷன் கடைகளுக்கு சர்க்கரை வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி திமுக ஆட்சி அமைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று திமுக தொண்டர்கள் அனைவரும் கேட்கின்றனர்.
அதனால்தான் எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சுதந்திரமாக சுற்றிதிரிந்து கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிடும் போதுதான் சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று முடிவு எடுப்பார்கள். அதுவரை சின்னம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். எந்த புகார் வந்தாலும் வாங்கிவைத்து கொள்வார்கள். தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்காது. நீதிமன்ற உத்தரவுபடி தேர்தல் ஆணையம் செயல்படும்.
ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராக இருந்தபோது கட்சி நிதி பாதுகாக்கப்பட்டது. ஆனால், தற்போது அதிமுக கட்சி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டு அரசியல் நடத்துபவர்கள் சேர்ந்து செயல்படலாம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். அதுபோல் இணைந்து செயல்பட்டால் நல்லதுதான். தேர்தல் வந்தால் அதிமுக கட்சி பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் தொடர்ந்து முதல்வராக இருந்திருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் வந்திருக்காது. பன்னீர்செல்வம் என்ற தலைவர் இல்லை என்றால் அதிமுக சர்வாதிகாரியிடம் கட்சி சென்றுவிடும். இபிஎஸ் மாநாடு நடத்த திட்டம் உள்ளது குறித்த கேள்விக்கு நாங்களும் பெரிய அளவில் மாநாடு நடத்த இருக்கிறோம். அது திருச்சி, தஞ்சாவூர் அல்லது சேலமாக இருக்கலாம்.
இபிஎஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் பார்ப்போம். சசிகலா, டிடிவி, இபிஎஸ், ஓபிஎஸ் அனைவரும் ஒன்றினைந்தபின்புதான் யார் தலைமை என்பதை முடிவு செய்வோம் அதுவரையில் நாங்கள் ஓபிஎஸ் தலைமையைத்தான் இருப்போம் என்றார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாட்களை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்றார். உடன் மாவட்ட செயலாளர் கஜேந்திரன், பொறுப்பாளர்கள் மகாகணபதி உட்பட பலர் இருந்தனர்.