சேலத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் அன்பழகன் தொடர்புடைய, கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வீடு உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் இரும்பாலை பகுதியில் வசித்து வரும் கரூர் கனிமவளத் துறை உதவி இயக்குனர் ஜெயபால் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கிருஷ்ண ராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பாக ஜெயபால் தர்மபுரி ஆகிய பகுதிகளில் பணியாற்றினார். அப்போது முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு பல்வேறு வகையில் உதவி செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 6:00 மணிக்கு துவங்கி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை எட்டு மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது‌.



இதை தொடர்ந்து, எடப்பாடியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரூபாய் 500 கோடி வரை ஊழல் நடந்துள்ளது என்றும் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியவில்லை என்றும் தெரிவித்தார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய அவர்


மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த காரணத்தால் 600 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது என்றார். இவற்றை திசைதிருப்பவே லஞ்ச ஒழிப்புத்துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகங்களை திமுக அரங்கேற்றி வருவதாகவும் ; முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெறும் சோதனை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குற்றம்சாட்டினார்.



ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 8 மாத காலத்தில் திமுக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்றும் அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தான் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்றும் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் 75 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் தொடங்கப்பட்டது என்று பட்டியலிட்டார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நகர்புற உள்ளாட்சித் தேர்தலை எந்த முறைகேடும் இல்லாமல் நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடிப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.