அதிமுக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பிறகு ஒபிஎஸ் – ஈபிஎஸ் இடையேயான விரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்த பிறகு அந்த விரிசல் பிளாவாக உருபெற்று வெடிக்கும் நேரத்திற்காக காத்துக்கிடக்கிறது.



ஒபிஎஸ் - ஈபிஎஸ்


ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர்செல்வமே தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சசிகலா மீது எந்த சந்தேகமும் இல்லை என ’பல்டி’ அடித்து பேட்டி கொடுத்தது எடப்பாடி பழனிசாமியை அப்செட் ஆக்கியது. சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர், இருவரும் ஒரு கட்சிக்குள்ளேயே இருந்து இருதுருவ அரசியல் செய்யத் தொடங்கினர்.


ஒருங்கிணைப்பாளருக்கு அதிக அதிகாரம் இருக்கிறதா இல்லை இணை ஒருங்கிணைப்பாளர்தான் கட்சியில் பலமான நபரா இருக்கிறாரா என்ற கேள்வி நிர்வாகிகளை துளைத்து, தொண்டர்கள் வரை புகுந்தது. இதற்கு தூபம் போடுவதுபோல, இருவரும் தனித் தனியாக அறிக்கைகள் கொடுக்கத் தொடங்கினர்.


கட்சி உறுப்பினர்கள் நீக்கம், இரங்கல், அதிமுக சார்ந்த அறிவிப்புகளை தவிர்த்து மக்கள் பிரச்னைகள், தமிழ்நாடு சார்ந்த சர்ச்சைகளில் இருவரும் தனித்தனியாக அறிக்கைகள் விடத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஒரு விஷயத்திற்காக ஒபிஎஸ் அறிக்கை வந்தால், அதே நாளில் இன்னொரு விஷயத்தை சொல்லி ஈபிஎஸ் அறிக்கை விடும் அளவுக்கு இருவரிடையே அறிக்கை போட்டி நடைபெற்று வந்தது.


சமீபத்தில் ஒபிஎஸ் மனைவி காலமான செய்தி அறிந்து மருத்துவமனைக்கு சசிகலாவும், பெரியகுளத்திற்கு டிடிவி தினகரனும் நேரடியாக சென்று ஒபிஎஸ் கைகளை பற்றி ஆறுதல் சொன்ன அடுத்த நாளில் இருந்து முற்றிலுமாக ஒபிஎஸ் நடவடிக்கைகள் மாறிப்போனதாக உணர்ந்தனர் அதிமுகவினர்.


உள்ளாட்சி தேர்தல் சரியாக நடத்தவேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக கடிதம் அனுப்பியது. ஆனால், அது எடப்பாடி பழனிசாமி பெயரில், அவர் எழுதிய கடிதமாக மட்டுமே இருந்ததை கண்டு அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.


அதன்பிறகும் ஒபிஎஸ் – ஈபிஎஸ் தனித்தனியாகவே அறிக்கை கொடுத்து வந்தாலும் இருவரின் அறிக்கைகளும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலமாகவே பத்திரிகை ஊடங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், அதிமுக பொன்விழா நடைபெற்ற அக்டோபர் 17ஆம் தேதிக்கு பின்னர், ஒபிஎஸ் அறிக்கைகள் மட்டும் ’அதிமுக ஒருங்கிணைப்பாளர்’ என்ற ஐடியுடன் Joseph J Suresh என்ற  மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.


கடந்த 19ஆம் தேதி டீசல் விலை ஏற்றம், 20ஆம் தேதி வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, 21ஆம் தேதி நாகை மாவட்டம் உருவான புகைப்பட கண்காட்சியில் ஜெயலலிதா புகைப்படத்தை வைக்க வேண்டும் என 3 அறிக்கைகளை கொடுத்துள்ள ஒபிஎஸ், இந்த மூன்று அறிக்கைகளையுமே அதிமுகவின் அதிகாரப்பூர்வ இ-மெயில் ஐடி மூலம் அனுப்பாமல், தன்னுடைய தனிப்பட்ட ஐ.டி வாயிலாகவே அனுப்பி இருக்கிறார்.


ஆனால், அக்டோபர் 18ஆம் தேதி விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தியதற்கு ஒபிஎஸ் – ஈபிஎஸ் விடுத்த கூட்டறிக்கை, அதே நாளில் எடப்பாடி பழனிசாமியை கட்சி நிர்வாகிகள் சந்தித்தது தொடர்பான புகைப்படங்களுடன் செய்தி, 20ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக முறைகேடு செய்திருப்பதாக கூறி ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அளித்த புகார் மனு மற்றும் புகைப்படங்கள், அதே நாளில் சசிகலா அதிமுக கொடியேற்றியது, பொதுச்செயலாளர் என்ற பெயரில் கல்வெட்டு திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு ஆகிய அத்தனை அறிக்கைகளும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் இருந்தே ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.


அதேபோல், உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றிருப்பதாக கூறி ஆளுநரை சந்திக்க அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே நிர்வாகிகள் சென்றனரே தவிர, ஒபிஎஸ் அவர்களுடன் செல்லவில்லை. அதற்கு காரணமாக, எப்படி தேர்தல் தோல்வி குறித்து அதிமுக நிர்வாகிகளோடு எடப்பாடி பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தியபோது, ஒபிஎஸ் புதுவீட்டில் பால்காய்ச்ச சென்றார் என்று சொன்னார்களோ, அதே மாதிரி, தற்போது ஒபிஎஸ் கோவையில் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக கூறியிருக்கின்றனர்.


ஆனால், உண்மையில் ஒபிஎஸ், சசிகலா ஆதரவு நிலைபாடு எடுத்து, சசிகலாவை அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால்தான், அவர் தனியாக மின்னஞ்சலில் அறிக்கைகள் அனுப்பி வருகிறார் என்றும், ஆளுநர் மாளிகைக்கு செல்லவில்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆனால், சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வருவதை விரும்பாத எடப்பாடி பழனிசாமி அதற்கு ஸ்டிர்க்டாக நோ சொல்லிவிட்டதால், இருவருக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பனிப்போர் எப்போதுவேண்டும் என்றாலும் எந்த நாளிலும் பொதுவெளியில் வெடிக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.