அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை செல்லாதது என்றும், ஜூன் 23-ந் தேதிக்கு முன்பு இருந்த நிலைப்பாட்டே தொடர வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். 


இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


" தர்மத்தை நம்பினேன். மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன். கழகத்தை உயிராக நேசிக்கும் கழகக் கண்மணிகளை, தொண்டர்களை நம்பினேன். உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன். இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது.


அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது. கழக நிறுவனர் புரட்சித் தலைவர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, கழகத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம்.


"தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர் வழி சென்றால்


நாளை நமதே”


என்னும் மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருமந்திரத்தை இதயப்பூர்வமாக ஏற்று, கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றைக்கும் நம் இதய தெய்வம் அம்மாதான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன்.  கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்."


இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளதால் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தின் முன்பும், தேனியில் அவரது சொந்த ஊரிலும் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து அசத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். 


நீதிமன்ற தீர்ப்பின்படி, எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி பதவி உள்ளிட்ட புதிய பதவிகள் நியமனம் ஆகியவை செல்லாதது ஆகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 


மேலும் படிக்க : OPS Case Judgement : அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது..! நீதிபதி பரபரப்பு தீர்ப்பு..! இபிஎஸ்க்கு பின்னடைவு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண