திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக நாளை பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு அவரது சகோதரர் மு.க.அழகிரி வாழ்த்து கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. 159 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. இதில், திமுக 125 இடங்களை கைப்பற்றியது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பது உறுதியான நிலையில் மே 7 ம் தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கொரோனா விதிகள் அமலில் இருப்பதால் பெரிய அளவில் விழா நடத்த முடியாது. இருப்பினும் கவர்னர் மாளிகையில் எளிய நிகழ்ச்சி மூலம் ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். இதனால், அவருக்கு பல மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பலர் வாழ்த்து கூறினர்.


இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு அவரது சகோதரரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  மு.க.அழகிரி வாழ்த்து கூறியுள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள எனது தம்பி மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி கொடுப்பார். முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் எதிரும், புதிருமாக இருந்த வந்த நிலையில், ஸ்டாலினுக்கு அழகிரி வாழ்த்து கூறியுள்ளது அனைத்து திமுவினர் இடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.