அமைச்சர் உதயநிதி பேசியது என்ன?


தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை, தமிழ்நாட்டை திருப்பி போட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய மத்திய அரசு, போதுமான நிதியை ஒதுக்கவில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.


குறிப்பாக, காட்டமான விமர்சனத்தை முன்வைத்த தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, மக்களின் பணத்தைத்தான் தாங்கள் கேட்பதாகவும், அவர்கள் அப்பன் வீட்டு பணத்தைக் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.


பதிலடி தந்த நிர்மலா சீதாராமன்:


இதற்கு எதிர்வினையாற்றிய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு சரியாகச் செயல்படவில்லை" என்றார். டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர், வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 


தமிழ்நாட்டுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பேரிடர் நிதியான 900 கோடி ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டு விட்டதாகவும் இது மட்டுமின்றி ஏற்கனவே தமிழ்நாடு அரசிடம் ரூபாய் 813.15 கோடி பேரிடர் நிதி இருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.


இந்த நிலையில், மத்திய நிதியமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி தந்த , "யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கருணாநிதி - முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல -  சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் ஸ்டாலின் போல பேசுகிறோம். 


"சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டும்"


எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது. வெள்ள பாதிப்புக்காக திமுக அரசு நிவாரண நிதி கேட்டால்,  "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என மத்திய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன்.


என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மத்திய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.


மீண்டும் சொல்கிறேன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம். வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம்.


 






நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மத்திய நிதி அமைச்சர் அவர்களே" என குறிப்பிட்டுள்ளார்.