சசிகலாவின் சொந்த ஊரில் ஓ.பி.எஸ் தலைமை ஏற்க வலியுறுத்தி மன்னார்குடியில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.


அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு ஆதரவாக அவர்களுடைய ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதேநேரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனக்கு வேண்டப்பட்ட ஆதரவாளர்களுடன் நேற்று முதல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.




அதிமுகவின் பொதுக்குழு வரும் ஜூன் 22ஆம் தேதி  முதல் ஜூன் 25ஆம் தேதி வரை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து, இபிஎஸ் தரப்பில் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வது, பன்னீர் செல்வத்திற்கு அவைத்தலைவர் மற்றும் வழிகாட்டுதல் குழுத் தலைவர் பதவிகளை வழங்குவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கவும், பொதுச்செயலாளரை தேர்வு செய்யவும், பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்து உள்ளதாக கூறப்படுகிறது.


 




இந்த தகவலை ஓ.பன்னீர் செல்வத்திடம் தெரிவிக்கவும், அவர் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் இந்த முடிவை அமல்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதே நேரம்,  ’இது போன்ற முடிவை ஏற்பதில்லை; தற்போதைய நிலையே தொடர வேண்டும்’ என்பதில் பன்னீர் செல்வம் உறுதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ருக்மணி பாளையம்,  பேருந்து நிலையம், பந்தலடி மற்றும் மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக "அம்மாவின் அடையாளமே" "நிகழ்கால பரதனே" ஒற்றை தலைமை ஏற்க வாருங்கள் ஐயா ஓபிஎஸ் என்ற வாசகத்துடன் திருவாரூர் மாவட்ட அதிமுக மன்னார்குடி ஒன்றியம் எனும் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் மன்னார்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதனை அறிந்த அதிமுக தொண்டர்கள் மன்னார்குடி கடைத்தெரு பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஓ.பி.எஸ்க்கு ஆதரவான போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர். சசிகலா மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோருடைய சொந்த ஊரான மன்னார்குடி பகுதியில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண