தி.மு.க.வில் இணைந்தார் மநீம முன்னாள் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன்

அவருடைய ஆதரவாளர்கள் கோவை மாவட்டத்தில் இருந்து சுமார் 5000 பேருடன் திமுகவில் இணைய உள்ளதாக சமூகவலைதளங்களில் கடந்த ஜூன் மாதம் தகவல் வெளியானது.

Continues below advertisement

மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத்தலைவரும் அந்தக் கட்சியின் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளருமான ஆர்.மகேந்திரன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துகொண்டார்.  அவரோடு அவரது ஆதரவாளர்கள் 78 பேரும் தன்னை திமுகவில் இணைத்துகொண்டார். மதுரவாயல் தொகுதியில் மநீம சார்பில் போட்டியிட்டு பின்னர் கட்சியில் இருந்து விலகிய பத்மபிரியாவும் திமுகவில் இணைந்தார்.

Continues below advertisement


இதுகுறித்த முன்னர் திமுக வெளியிட்டிருந்த செய்தி அறிக்கையில்,  ‘திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் டாக்டர். R. மகேந்திரன் அவர்கள் இன்று (8 ஜூலை 2021) திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையவிருக்கின்றார்.


பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 78 பேர் கொண்ட முதற்கட்டக் குழுவும் இன்று இந்நிகழ்வில் டாக்டர். R. மகேந்திரன் அவர்களுடன் நேரடியாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையவுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட 78 பேர்களுடன் கட்சியில் இணையவுள்ள மற்ற 11,000 பேர்களின் முழு விபரங்கள் (பெயர், தொகுதி, தொலைபேசி எண், அடையாள அட்டை, முந்தைய கட்சி) அடங்கிய ஒரு தொகுப்புப்புத்தகத்தை, தலைவர் திரு.M.K.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிப்பார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் மகேந்திரன் தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் அதனை மறுத்திருந்தார்.  மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் கடந்த மே மாதம் அந்தக்கட்சியில் இருந்து விலகினார். அவர் விலகும்போது அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். இவரைத் தொடர்ந்து, அக்கட்சியில் பல முன்னணி நிர்வாகிகள் விலகினார்கள்.

இதனைத்தொடர்ந்து, மகேந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. ஆனால், அதை அவர் மறுத்தார்.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவருடைய ஆதரவாளர்கள் கோவை மாவட்டத்தில் இருந்து சுமார் 5000 பேருடன் திமுகவில் இணைய உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.


இதுகுறித்து மகேந்திரன் நாளிதழ் ஒன்றுக்கு பேசுகையில், “தற்போது வரை, எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை. எனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து இம்மாத இறுதிக்குள் நிச்சயமாக ஒரு முடிவு எடுப்பேன். அப்போது ஊடகங்களை அழைத்து கண்டிப்பாக கூறுவேன்” என்று கூறியுள்ளார்.  இந்த கருத்தில் ஒரு விசயத்தை பார்க்க முடிகிறது. இல்லை என அவர் மறுக்கவில்லை. தற்போது முடிவு செய்யவில்லை என்கிறார். இம்மாத இறுதியில் முடிவெடுப்பேன் என்கிறார். இதுவும் ஒருவிதமான சந்தேக நிலையைையே ஏற்படுத்துகிறது. என்றாலும், இன்றைய இணைப்பு செய்தியை அவர் மறுத்திருந்தார். 

பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன், எம்பிபிஎஸ் படித்து முடித்து 30 ஆண்டுகள் மருத்துவ தொழில் செய்து வந்தவர். மேலும், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், விவசாயத்தின் மீது தனியாத ஆர்வம் கொண்டு பயிர்வகையை ஏற்றுமதி  செய்துவருகிறார்.  சமூகம் சார்ந்த பிரச்னைகளைக் களைவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட மகேந்திரன், தானாகவே முன்வந்து மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.  இவரின், ஆர்வமிக்க செயல்பாடுகளை கவனித்து வந்த கமல்ஹாசன், அவருக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவியை கொடுத்தார். 

அத்துடன் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்தார். அதற்கேற்றார்போல, அங்கு 1.44 லட்சம் வாக்குகள் பெற்று  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில், 28,634 வாக்குகள் சிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து கிடைத்தது. இதன்காரணமாக, 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மகேந்திரன் போட்டியிட்டார். கோவை தொகுதியில் மகேந்திரன் பெற்ற வாக்குகளே, கோவை தெற்கில் கமல்ஹாசனை போட்டியிட வைத்தது. ஆனால், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. கடைசி வரை வானதி சீனிவாசன் உடன் போராடிய கமல், 1,439 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவிகிதம் குறைந்தது.

மிகப்பெரிய தோல்விக்குப் பிறகும் கமலின் அணுகுமுறையில் மாற்றமில்லை எனக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார் அதன் துணைத் தலைவர் மகேந்திரன்.இந்த நிலையில் தற்போது ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola