சேராத இடம் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்வியே கிடைக்கும்; அதிமுகவின் உட்கட்சி பூசல் வெறும் கண்துடைப்பு, என்ன சிக்கல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்: நயினார் நாகேந்திரன் பேட்டி.

சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன்
 
மதுரை ஆதீனத்தை சந்தித்த பின்னர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில்,
"  மதுரை ஆதீனம் நீண்ட நாட்களாக அழைத்தார், அதனால் மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்க வந்துள்ளேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜக காரணம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. தி.மு.க., சொத்துவரியை உயர்த்தியுள்ளது, மின் கட்டண உயர்வு, நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவில்லை, தடுப்பணைகள் கட்டவில்லை, ஆயிரம் ரூபாய் 2 ஆண்டுக்கு பின்னரே கொடுத்தார்கள், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு குற்ற பிரச்னைகள் உள்ளது. இந்த சூழலில் எப்படி திமுகவிற்கு மக்கள் வாக்களிப்பார்கள். எனவே தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெரும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும். இப்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் வெறும் கண்துடைப்பு தான்.
 
செங்கோட்டையன் த.வெ.க., இணைந்தது குறித்த கேள்விக்கு
 
த.வெ.க.,வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. துரியோதனனிடம் சென்றது போல, சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்கு தோல்வி தான் கிடைக்கும். இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியமைக்கும். டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார். இனிமேல் அவரை மீண்டும் எப்படி அழைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். என்ன பிரச்சனை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம். அதில் உறுதியாக இருக்கிறோம்.
 
அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பிக்க போகிறாரா?
 
அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி துவங்க மாட்டார். நான் தற்போது பா.ஜ.க., மாநில தலைவராக உள்ளேன். நாளை இல்லாமல் இருக்கலாம் அதற்காக தனிக்கட்சி ஆரம்பிக்க முடியுமா. நிச்சயமாக அவ்வாறு செய்ய மாட்டேன் அதே போல தான் அண்ணாமலையும்.
 
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான கேள்விக்கு
 
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கலவரத்தை தூண்ட கூடிய கதாநாயகனே சு.வெங்கடேசன் தான். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் சங்கடம் உள்ளதா? திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை" என்றார்.