நெருங்கும் தேர்தல்- பல்டி அடிக்கும் நிர்வாகிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சிகள் தங்கள்  கட்சியை வலுப்படுத்தும் வகையில் முக்கிய நிர்வாகிகளை தங்கள் அணிக்கு இணைக்கும் வகையில் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுகவில் இருந்து அதிமுகவிற்கும், அதிமுகவில் இருந்து திமுகவிற்கும் ஏராளமானோர் தாவி வருகிறார்கள்.

அதில் முக்கிய நிகழ்வாக திமுகவில் முன்னாள் துணை மேயராக இருந்தவரும், மு.க. அழகிரியின் ஆதரவாளருமான மன்னன் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கருணாநிதி காலத்தில் உட்கட்சி பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். 

திமுகவில் அழகிரி ஆதரவாளர் மன்னன்

மீண்டும் மக்கள் பணியாற்ற கட்சியில் இணைத்துக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்தும், சிலர் அதிகார மமதையில் அதனை ஏற்கவில்லை.அந்த மமதை என்ன ஆக போகிறது என வரும் தேர்தலில் தெரியவரும் என கூறினார். வருகிற சட்ட மன்ற தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதற்காக உயிரை கொடுத்து உழைப்போம் என தெரிவித்த அவர், மதுரையில் சிலர் அதிகார துஷ்பிரயோகம் செய்து திமுக கீழ்மட்ட தொண்டர்களை அடிமை போல நடத்துகிறார்கள். இந்த அடிமை தனத்திற்கு முடிவு கட்டுவோம் எனவும் தெரிவித்தார்.  மேலும் என்னை போல இன்னும் பலர் அதிமுகவில் இணைய உள்ளார்கள். திமுகவில் பாடம் புகட்டுவார்கள் என கூறயிருந்தார்.

இந்த நிலையில் அடுத்ததாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், அழகிரியின் மற்றொரு ஆதரவாளருமான எஸ்.ஆர்.கோபி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இன்று இணைய இருப்பதாக கூறப்படுகிறது. தென் மாவட்டத்தில் மு.க. அழகிரிக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் பொட்டு சுரேஷும், எஸ்ஸார் கோபியும்தான். இதில் பொட்டு சுரேஷை மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு, அழகிரிக்கு வலது கரமாக  இருந்தவர் எஸ்ஸார் கோபிதான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்டாலின் ஆதரவாளராக மாறினார். 

அதிமுகவில் இணையும் எஸ்.ஆர். கோபி

இருந்த போதும் எந்தவித முக்கிய பொறுப்பும் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் அதிமுகவில் எஸ்.ஆர் கோபி இணையவுள்ளார்.  ஏற்கனவே மதுரையில் திமுக மற்றும் அதிமுக சரிசம பலத்தில் களத்தில் உள்ள நிலையில், தற்போது அழகிரி ஆதரவாளர்கள் அடுத்தடுத்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியில் இணைவது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.