பிரதமர் வேட்பாளராக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் இருக்கக்கூடாது என காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.


எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தப்பின் பிரதமர் தேர்வு குறித்து முடிவு எடுக்கலாம் எனவும் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 70 வது பிறந்த நாளினைக் கொண்டாடுகிறார். இது தொடர்பாக திமுக சார்பில் பிறந்த நாள் கொண்டாட்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், மு.க. ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக வர முடியுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ ஏன் முடியாது? அவரால் ஏன் பிரதமர் ஆக முடியாது? அதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பரூக் அப்துல்லாவின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


 மேலும் அவர் தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியின் தொடக்கமாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு செய்ய முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
 ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்பதே எங்கள் குரலாக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்து அதன் பின்னர் யார் சரியானவரோ அவரை பிரதமராக  தேர்வு செய்வது குறித்து  முடிவு எடுக்கலாம்.  


மேலும்,


“இது ஒரு அற்புதமான ஆரம்பம். ஸ்டாலினும், திமுகவும் இந்திய ஒற்றுமைக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு. இந்தியாவில் உள்ள வேற்றுமை பாதுகாக்கப்பட்டால், ஒற்றுமை பாதுகாக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநில ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில் சென்னையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்  ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர். 


ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என மேற்க வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி இது போன்ற பொதுக் கூட்டத்தினை ஏற்பாடு செய்து, ஒட்டுமொத்த இந்த அரசியலைடும் தனது பக்கம் திருப்பினார். ஆனால், அதற்கு எதிர்கட்சிகள் கைகொடுக்க தயாராக இருந்தாலும், தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையவில்லை. ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு இதுவரை மம்தா வாழ்த்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு மம்தாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.