சேலம் மாநகர் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சந்தித்தனர். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று நேரடியாக மக்களின் நலன், மாநிலத்தின் நலன் சார்ந்த விஷயங்கள், திமுகவால் தரைவாக்கப்பட்டதை மீட்கும் வகையில் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் கூட்டணி குறித்து தெரிவிப்பதற்கு நிறைய நேரம் இருக்கிறது. கவலை வேண்டாம், உரிய நேரத்தில் அதிமுக தலைமை எந்தெந்த கூட்டணி கட்சிகள் உள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் முறைப்படி தெரிவிப்பார் என்றார்.



மேலும் ஓபிஎஸ், தினகரனுடன் இணைந்து கொள்ளட்டும்; ஏற்கனவே தொண்டர்களால் நிராகரிக்கப்பட்ட சக்திகள்,பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது சக்திகள். புதுக்கோட்டையில் ஓபிஎஸ் கூட்டத்தில் கூலிக்கு ஆட்களை அழைத்து வந்தனர். கூட்டத்திற்கு வந்தவர்கள் ஓபிஎஸ் வந்து நின்றவுடன் எழுந்து ஓடிவிட்டனர். ஆனால் அதிமுகவில் இரண்டு கோடிக்கு மேல் தொண்டர்கள் எழுச்சி உடன் இருக்கிறார்கள்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று அதிமுக சிறப்பான முறையில் வழி நடத்தி வருகிறார். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஒன்று சேர்ந்தாலும் எதுவும் செய்யமுடியாது என்றார். தொடர்ந்து பேசியவர், ஓபிஎஸ் அடிப்படையில் அதிமுக தொண்டரே கிடையாது. அவருக்கும் கட்சிக்கும் சம்மதமே இல்லை... சம்பந்தமே இல்லாதவர் பேசுவதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும். உளறல், பிதற்றல் என்று எடுத்துக் கொள்ளலாம் என்றும் விமர்சனம் செய்தார். திமுக, பாஜக தவிர்த்து யாரும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது. அனைத்து கட்சிகளுடன் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள்; அவர்களும் தங்களுடன் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள், உரிய நேரத்தில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து பொதுச் செயலாளர் அறிவிப்பார் எனவும் கூறினர்.



திமுகவில் எப்போது குழப்பம் வரும் என்று அதிமுக காத்திருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, அதிமுகவிற்கு அது மாதிரி அவசியம் கிடையாது; குழம்பிய குட்டையில் நீர் பிடிப்பது திமுகவிற்கு வந்த கலை... எங்களுக்கு அது அவசியம் கிடையாது. நாங்கள் நம்பி இருப்பது தொண்டர்களையும் பொதுமக்களையும் தான்... தொண்டர்களும், பொதுமக்களும் எங்களுடன் இருக்கும் வரை திமுகவுக்கு தான் இழப்பு... அவர் சொல்லும் கருத்து முழுமையாக பொருந்தாத கருத்து என்றும் தெரிவித்தார்.


சந்திப்பின்போது அதிமுக தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர்கள் நத்தம் விஸ்வநாதன், வைகைச் செல்வன், ஓ எஸ் மணியன், பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, செம்மலை, தங்கமணி, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.