குஜராத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக:


பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இந்த முறை இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளில் முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதியும், 93 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அக்கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியும் முனைப்பு காட்ட, குஜராத் தேர்தல் களத்தில் மும்முனை போட்டி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகரில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். அதில் பெண்களை குறி வைத்து பல்வேறு இலவச அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.


இலவச திட்டங்களை அறிவித்துள்ள பாஜக:


அதன்படி, ஆரம்பப் பள்ளி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு தரமான இலவச கல்வி வழங்கப்படும். தகுதியான கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின்சார இருசக்கர வாகனம் வழங்கப்படும்.  மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். துவாரகாவில் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை நிறுவப்படும் மற்றும் குஜராத் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 20,000 அரசுப் பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்ப கல்விக்காக ஜிஐடி உருவாக்கப்படும்:


தீவிரவாத எதிர்ப்பு உருவாக்கப்பட்டு அச்சுறுத்தல்களை அகற்றுவதோடு, தீவிரவாத குழுக்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளின் ஸ்லீப்பர் செல்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்படுவர். சிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும். பொது சொத்துக்களை சேதப்படுத்தும் மற்றும் தனியார் சொத்துக்களை தாக்கும் சமூக விரோதிகளிடமிருந்து மீட்பது தொடர்பான சட்டம் உருவாக்கப்படும். குஜராத் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை நிறுவுவது மட்டுமின்றி, 20,000 அரசுப் பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக மாற்றப்படும். 2036 இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நோக்கத்துடன் குஜராத் ஒலிம்பிக் மிஷனைத் தொடங்கவும், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உட்கட்டமைப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.






விவசாயத்திற்கு முக்கியத்துவம்:


வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.10,000 கோடி, நீர்ப்பாசன வசதிகளுக்கு ரூ.25,000 கோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு 2 லட்சம் வரை பிணையில்லாத கடன் வழங்குவதற்கான ஷ்ராமிக் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும். காந்திநகர் மற்றும் சூரத் மெட்ரோ வழித்தடங்களை முடித்து, ராஜ்கோட் மற்றும் வதோதரா ஆகிய இடங்களில்  மெட்ரோ ரயில் சேவையை தொடங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 56 பழங்குடியின துணைத் திட்ட தாலுகாக்களிலும் மொபைல் ரேஷன் விநியோகத்தை செயல்படுத்துவதாகவும், வன்பந்து கல்யாண் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ்  ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ளவும் பாஜக உறுதி செய்துள்ளது. 


பாஜகவின் முரண்பாடு:


இலவசங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர், இலவச திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான், பாஜக வெளியிட்டுள்ள குஜராத் தேர்தல் அறிக்கையில் பல இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.