ஆளுநர் பேச வேண்டியது Rule of law தானே தவிர Rule of manu அல்ல என்று விமர்சித்து முரசொலி தலையங்கம் எழுதியுள்ளது.


சர்ச்சைக்குள்ளான ஆளுநரின் பேச்சு:


திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளேடான முரசொலியில் அரசியல் விமர்சனங்கள் நாள்தோறும் வெளிவருவது வழக்கம். சமீப காலமாக அரசியல் கருத்துகளை பேசி வந்த மதுரை ஆதீனத்தை விமர்சித்து, காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நடந்தது நினைவிருக்கிறதா? என்று கேள்வியெழுப்பி விமர்சனம் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது; சனாதன தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியது என்றும் ஒரே பரமேஸ்வரா என்பதையே சனாதன தர்மம் கூறுகிறது என்று ஆளுநர் ரவி சமீபத்தில் பேசியிருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 




முரசொலி தலையங்கம்:


ஆளுநரின் இந்த பேச்சை மையமாகக் கொண்டு திமுக சார்பில் முரசொலியில் தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டின் ஆளுநராக வந்தது முதல் ஆர்.என்.ரவி அவர்கள், உதிர்த்து வரும் கருத்துகள் மாநிலத்தில் அதிகமான குழப்பதையே அதிகம் விதைத்து வருகின்றன. அதுதான் அவரது உள்ளார்ந்த நோக்கமா எனத் தெரியவில்லை.


தேசம் என்பதை எந்தப் பிரிவினையும் இல்லாமல் பார்க்கிறாராம். அதாவது மாநிலம் என்று பிரித்து பார்க்கவில்லையாம்! தேசத்தைப் பிரிவினை இல்லாமல் பார்ப்பவர் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருக்க எப்படி ஒப்புக் கொண்டார் ? பா.ஜ.க.வுக்கு இந்தியா முழுமைக்கும் ஒரே தலைவர் நட்டா மட்டும் தானே இருக்க வேண்டும். அண்ணாமலை எதற்கு தமிழகத் தலைவராக ? முதலில் அண்ணாமலையை நீக்கச் சொல்லி அல்லவா ஆளுநர் குரல் எழுப்ப வேண்டும். பி.சி. அணி, எஸ்.சி. அணி என்று எதற்காக அந்தக் கட்சிக்குள் ஆயிரம் அணிகள் ? இவை அனைத் துமே ஆளுநருக்கு எதிரானவை அல்லவா ?


”சனாதன பிடியில் ஆளுநர்”:


இவை அனைத்தையும் விட ஆளுநர் உதிர்த்து வரும் ஆன்மிக - தத்துவ முத்துக்கள் அபத்தக் களஞ்சியமாக இருந்து வருகின்றன. அவரது ஆன்மிகம் என்பது அவரது உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் பேசிய பேச்சு என்பது - தன்னை சனாதனக் காவலராக காட்டிக் கொள்ளும் வகையில் பேசி இருக்கிறார். சனாதன சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார் என்பதையே இதன் மூலமாக அறிய முடிகிறது.


வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டை பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மிகத்தில் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மிகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதன தர்மம் வழி முறையாக இருக்கும்” என்று சொல்லி இருக்கிறார் ஆளுநர்.


 


எது சனாதனம்?:


இவருக்கு சனாதன தர்மம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. சனாதன தர்மம் என்றால் என்ன என்று அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்கவும். பூரி ஜகநாதர் கோவிலுக்குள் அவரைச் செல்லவிடாமல் தடுத்தது சனாதனம்.




“கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு சக மனிதனை விலங்குகளை விடக் கேவலமாக நடத்துவது சனாதனம். எறும்புக்குச் சக்கரை போட்டுவிட்டு, மனிதனின் குடிநீர் உரிமையை மறுக்கும் இத்தகைய கபட வேடதாரிகளின் நட்பு உங்களுக்கு வேண்டாம்” என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். இதுதான் சனாதனம். மனிதனை சாதியாக பிரித்து, சாதிக்குள் உயர்வு தாழ்வை புகுத்தி இன்னார்க்கு இன்னது என்று வகுததற்குப் பெயரே சனாதனம். தவம் செய்த சம்பூகன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக அழித்தது சனாதனம். குரு இல்லாமல் ஆயுதப் பயிற்சி பெற்றதால் ஏகலைவனின் கட்டைவிரலைக் காணிக்கையாக வாங்கியது சனாதனம்.


”சனாதனத்தின் நவீன வடிவம்”:


'நீட்' என்பது சனாதனத்தின் நவீன வடிவம். புதிய கல்விக் கொள்கை புதிய மனு. இவை சமூகநீதிக்கு எதிரானவை. சனாதனத்தால் அதிகமாக நசுக்கப் பட்ட இனம் பெண்ணினம். மனுஸ்மிருதியை படித்தால் தெரியும். சனாதனத்தை ஆதரிக்கும் ‘ஆண் சனாதனிகள்’ தங்கள் வீட்டுப் பெண்களுக்கு மத்தியில் அதை படிக்க முடியுமா ? தங்கள் மகள்களைத்தான் அப்படி நடத்த முடியுமா ?


"பெண்கள் வேலைக்கு போனதால்தான் வேலையில்லா திண்டாட்டம் வருகிறது' என்றும், 'பெண்ணை தனியாக விட்டால் தப்பு நடக்கும்' என்றும் இன்னமும் உட் கார்ந்து சிலர் கதாகலாட்சேபம் செய்து வருகிறார்கள்( இணையத்தில் இந்த காணொளிகள் இருக்கின்றன) அல்லவா இதுதான் சனாதனம். இதனைத்தான் ஆளுநர் விரும்புகிறாரா? என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.




Rule of Law.. Rule of Manu..:


இறுதியாக, சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம் ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப் பட்டது” என்றும் பேசி இருக்கிறார் ஆளுநர். என்ன சொல்ல வருகிறார்? அதே போலக் குண்டு போடச் சொல்கிறாரா ? 'கிறிஸ்தவ' அமெரிக்கா - ‘சனாதன அமெரிக்காவாக ஆகிவிட்டது என்கிறாரா ? இனி அமெரிக்கா செய்யும் அனைத்துச் செயலும் சனாதனத்தைக் காப்பாற் றச் செய்யும் செயல் தானா? பாகிஸ்தானுக்கு அவர்கள் உதவி செய்தாலும் அது சனாதனத் தொண்டா? என்ன பேசுகிறோம் என்பதைத் தெரிந்துதான் பேசுகிறாரா ஆளுநர்? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக, ஆளுநர் பேச வேண்டியது Rule of law தானே தவிர Rule of manu அல்ல என்று அந்த தலையங்கத்தில் கூறியுள்ளது.