பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் திமுகவின் துரோகம் அம்பலப்பட்டு இருப்பதாக பாமக மாநில தலைவர் ஜி.கே. மணி விமர்சித்துள்ளார். 


என்.எல்.சி. விரிவாக்க திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என மக்களவையில் நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதற்கு பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்காது ஏன்? என தமிழக வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி இருந்தார்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜி.கே. மணி வெளியிட்ட அறிக்கையில், ”நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் தெரிவிக்கப்படும் பதில்களுக்கும், அவை நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உறுப்பினர்களின் வினாக்களுக்கு மத்திய அமைச்சர்கள் எழுத்து மூலம் அளிக்கும் பதில்கள் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படாது. மாறாக உறுப்பினர்களின் இணைய பக்கத்திலும் நாடாளுமன்ற அவைகளின் இணையதளங்களிலும் தான் வெளியிடப்படும். அவற்றின் மீது எந்த எதிர் வினாவும் எழுப்ப முடியாது, விவாதமும் நடத்த முடியாது. தமிழ்நாட்டின் அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு இது கூட தெரியாதது பரிதாபம் தான்.


தமிழ்நாட்டில் என்.எல்.சி சுரங்கத் திட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அமைச்சர் கூறுவதற்கான துணிச்சலை வழங்கியது தமிழகத்தை ஆளும் திமுக அரசுதான். தமிழ்நாட்டில் 64,750 ஏக்கர் நிலப்பரப்பில் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகை உரிமம் 1956 ஆம் ஆண்டிலிருந்து என்.எல்.சிக்கு வழங்கப்பட்டு வருகிறது, இந்த உரிமம் வரும் 2036ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்எல்சிக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துவிட்டால் அதன் பின் என்.எல்.சி தமிழகத்தில் எதையும் செய்ய முடியாது. அதை செய்யும் அதிகாரம் திமுக அரசுக்கு இருக்கும் நிலையில் அந்த அதிகாரத்தை செயல்படுத்தாமல் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை பன்னீர்செல்வம் கேள்வி கேட்பதே அவரது கையாலாகாத தனத்தைத்தான் காட்டுகிறது. திமுக அரசின் தோல்வியையும் துரோகத்தையும் மூடி மறைப்பதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மீது பன்னீர்செல்வம் பழி போட முயல்வதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 


திமுக சார்பில் மக்களவையில் 24 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களில் ஒருவராவது என்எல்சி விவகாரம் குறித்தும், உழவர்கள் நலன் குறித்தும், நாடாளுமன்றத்தில் வினா எழுப்பி உள்ளார்களா? என்.எல்.சி நிறுவனத்திடமிருந்து உழவர்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுகவிற்கும், எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை.


உழவர்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு என்எல்சி ஆதரவாக எம்ஆர்கே பன்னீர்செல்வம் செயல்படுவதற்கு வலிமையான காரணங்கள் உள்ளன. என்எல்சி நிறுவனத்தில் இருந்து திமுகவை சேர்ந்த அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கடந்த பல பத்தாண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. அதை எம் ஆர் கே பன்னீர்செல்வத்தால் மறுக்க முடியுமா?


இப்போதும் எனக்கு ஓர் ஐயம் இருக்கிறது இந்த அறிக்கையை எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்க மாட்டார். அவரது பெயரில் அவரது கட்சி தலைமையே எழுதி வெளியிட்டிருக்கும் என்பது தான் அந்த ஐயம். அந்த ஐயத்தை போக்க எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு அற்புதமான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த புதிய நிலக்கரி திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதி இன்றும் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் மூன்றாவது சரங்கத்திற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. 


வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் என்ற முறையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து “சட்டப்பேரவையில் நீங்கள் அறிவித்தவாறு என்எல்சி மூன்றாவது சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடலூர் மாவட்ட மக்களுடன் இணைந்து பெரும் போராட்டத்தை நடத்துவேன்” என்று உறுதிபடகூற வேண்டும். அவ்வாறு கூறினால் அவரை மண்ணைக் காக்க வந்த வீரபாண்டிய கட்டபொம்மனாக கடலூர் மாவட்ட மக்கள் போற்றுவார்கள். இல்லாவிட்டால் மண்ணுக்கு துரோகம் செய்த எட்டப்பனாகத்தான் வரலாற்றில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இடம் பெறுவார். இது உறுதி" எனத் தெரிவித்துள்ளார்.