கடந்த வருட கடைசி காலாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஜெய் பீம்'. 


உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்தப் படத்தின் நிஜமான நாயகன் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு. 1993-இல் வழக்கறிஞராக இருந்த போது, குறவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக அவர் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையில் படத்தின் கதையை இயக்குநர் த.செ. ஞானவேல் அமைத்திருப்பார். படத்தில் இருளர் இனத்துக்கு நடந்ததாக கதை சொல்லப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006 இல் பாதிக்கப்பட்ட குறவர் மக்களுக்கு தீர்ப்பு வாங்கித் தந்தார். பலரது வீட்டிற்குள் நூலகம் இருக்கும்; ஆனால் வீடே நூலகத்திற்குள்தான் இருக்கிறது என்றால் அது ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு இருக்கிற இடமாகத்தான் இருக்க முடியும்.


அந்த அளவிற்கு வீட்டில் திரும்பிய திசைகளில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தான். அந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சட்டம் சம்பந்தப்பட்ட புத்தகங்களே! அவர் அவரது சுயசரிதை நூலாக எழுதியிருக்கும் நூலின் பெயர்தான் 'நானும் நீதிபதி ஆனேன்'. இந்த நூலில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த போராட்டம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார். 



அந்த நேரத்தில் முதல் அமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். அதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அந்த போராட்டத்தை அடக்குவதற்கு காவல்துறையினை குவித்து பெரும் கலவரம் நடத்தப்படுகிறது. அந்த கலவரத்தில் 1971, ஜூலை 23 அன்று பி.உதயகுமார் எனும் மாணவர் உயிரிழக்கிறார். அந்த நேரத்தில் சரியாக கட்சியை விட்டு நீக்கப்பட்ட எம்ஜிஆர், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை வளர்க்க சூறாவளி பிரச்சாரம் செய்கையில், சிதம்பரம் வருகையில் தனது அரசியலுக்காக உதயகுமாரின் மரணத்தை பயன்படுத்திக்கொள்கிறார்.


கட்சியில் உள்ளபோது மௌனம் சாதித்த எம்ஜிஆருக்கு இது அரசியல் கருவியாக கிடைத்தது என்று எழுதியுள்ளார் நீதியரசர் சந்துரு. அந்த நேரத்தில் போராடிய SFI மாணவர்களுக்காக வாதாடிய சந்த்ரூ ஆங்கிலத்தில் வாதாட ப.சிதம்பரத்தை அழைத்து சென்றுள்ளார். அதற்கு அவர் கட்டணம் எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை என்று எழுதியுள்ளார்.



இதெல்லாம் நடந்த பிறகும் 2001ல் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆகும் வாய்ப்பு வந்ததும் மாநில முதலமைச்சரிடம் விருப்பம் கேட்கப்படும்போது, அப்போதும் முதல்வராக இருந்த கருணாநிதி எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இசைந்தார் என்று எழுதுகிறார். "ஒருவேளை,காலம் மனிதர்களைப் பண்படுத்தலாம்! மாணவர்கள் இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றியதுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சம்பவங்களை நேரடியாக நான் விமர்சித்திருப்பினும், அன்றைய முதல்வர் கலைஞர் பின்னர் ஆட்சியை இழந்து, பல வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, என்னுடைய பெயர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அரசின் கருத்துரை கேட்டபோது உடனே இசைவு அளித்தார்." என்று எழுதுகிறார்.






மேலும் முரசொலியில் கலைஞர் எழுதியதாக கூறியபோது, "எனது சமூக நீதி குறித்த தீர்ப்புகளை, அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்' என்ற பெயரில் நான் ஓய்வுபெற்ற பிறகு புத்தகமாக வெளியிட்டேன் (2014). அப்போது ஓய்விலிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அப்புத்தகத்தைப் படித்ததோடு மட்டுமின்றி, யாரும் எதிர்பார்க்காத வகையில், 'முரசொலி'யின் முதல் பக்கத்தில், நீதிபதி சந்துருவின் நெறிதவறாத வழிகள்' என்று எட்டு பத்திகளுக்குத் தன்னுடைய தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார் என குறிப்பிட்டுள்ளார்


"நீதிபதி சந்துரு அவர்கள் வழங்கிய பல தீர்ப்புகளை, குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளிலே அவர் அளித்த தீர்ப்புகளை உள்ளடக்கி, இந்த நூல் அமைந்திருப்பதை நான் முழுவதும் படித்ததோடு, அந்தக் கருத்துகள் உனக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தில் இவற்றைக் குறிப்பிட்டுள்ளேனே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் அல்ல. இத்தகைய தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி சந்துரு அவர்கள் தி.மு. கழக அரசையும், ஏன் என்னையும்கூட விமர்சனம் செய்தவர் என்றுகூடச் சொல்வார்கள். இருந்தபோதிலும், இந்த நூலில் அவர் எழுதிய தீர்ப்புகளைப் பாராட்டுகின்ற வகையில்தான் இதனை எழுதினேன்!" என்று கலைஞர் எழுதினார்" என தனது சுயசரிதை நூலான நானும் நீதிபதி ஆனேன் நூலில் எழுதியுள்ளார் நீதியரசர் சந்துரு.