நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைக்கழக வழக்கறிஞர் சூரியா வெற்றிகொண்டான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். ஆர்.எஸ்.பாரதி பேசுகையில்,   “திராவிட இயக்கம்தான் இனத்தையும் மொழியையும்  காப்பாற்றும் கொள்கையுள்ள கட்சி,  இந்தி எதிர்ப்பு என்பது திமுககாரனின் ரத்தத்தில் ஊரியது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அரசியலுக்கு வர காரணம் இந்தி எதிர்ப்புதான். தனது 14 வயதில் கையிலே தமிழ் கொடியை ஏந்திக் கொண்டு  93 வயது வரை  இந்தியை  எதிர்த்து கொண்டே மறைந்தவர் தான் கலைஞர் கருணாநிதி.  தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழும், ஆங்கிலமும்  இருக்கு. தமிழ்நாடு இருமொழிக் கொள்கை இருந்து இந்த மாநிலத்தை வளர்த்த காரணத்தினால் தான் நம்மூரில் உள்ளவர்கள் நம்மூரில் வேலை செய்கிறோம்.


இந்தி எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் 62 நாள் பாளையங்கோட்டையில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மும்மொழிக் கொள்கையை ஏற்ற மாநிலங்களில் இன்று அவர்களின் தாய் மொழி அழிந்து வருகிறது, மக்களை ஏமாற்றி ஒன்றிய அரசு இந்தியை திணிக்க பார்க்கிறது. இதற்கு ஒரு ஆளுநர் வேறு பணியாற்றுகிறார். நமது வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழகம் திராவிட நாடு இல்லை என்கிறார். தமிழை அழிக்க முயற்சி நடக்கிறது. தமிழகத்தில் திமுக இருந்த காரணத்தினால் அண்ணா இருந்த காரணத்தினால் தான் தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்று ஆளுநரைச் சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஊழல் நடக்கிறது, போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என புகார் அளித்துள்ளார்.  


கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் குட்கா விற்பனை செய்ததாக நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசு சிபிஐயை வைத்து அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயகாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டது. எனவே நீங்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி என எடப்பாடிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். போதைபொருள் விற்பனையில் பாஜகவினர்தான் ஈடுபடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறேன். எடப்பாடியாருக்கு தைரியம் இருந்தால் அவர்களை கேட்கட்டும்.. ஊழல் ஊழல் என்று சொல்லும் எடப்பாடி மீது வழக்கு போட்டு அவர் மீது சிபிஐ விசாரணை போடப்பட்டு நான் கொடுத்த மனுவிலே விசாரணை இருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் விசாரணை துவங்கி அவர் சிறைக்கு செல்வது உறுதி. வேலுமணியும் செல்வது உறுதி. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், நான் போட்ட வழக்கிலே யாரும் தப்பித்தது கிடையாது என்பது வரலாற்று உண்மை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்த மாதம் வழக்கு ஆரம்பிக்கிறது” என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் தலைவரை  பார்த்து எடப்பாடி சவால் விடுவாரேயானால் இன்னும் கொஞ்ச நாளில் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும். மருந்தில் ஊழல், தொடப்பத்தில்  ஊழல், லைட் வாங்குவதில் ஊழல், ஏன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை செய்ததில் 1 கோடி ரூபாய்க்கு தோசை சாப்பிட்ட ஒரே கட்சி அதிமுக தான். இதையெல்லாம் வீதிக்கு வீதி நாங்கள் சொல்வோம். எனவே மோடியை நம்பி இருக்கிற எடப்பாடியாரே எந்த ஜெயிலுக்கு போக வேண்டும் என முடிவெடுத்து கொள்ளுங்கள்” என விமர்சித்தார்.