சேலத்தில் ஓபிஎஸ் அணி ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்ட கழகம், புறநகர் மாவட்ட கழகம் கலந்து கொள்கிறது. மேலும் ஓசூர், நாமக்கல், ஈரோடு நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஓ பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்படி செல்கிறோம். தென் மாவட்டங்களில் உள்ள மக்களை பார்த்தால் எடப்பாடி பழனிசாமி எதிரியை நினைக்கிறார். இதன் எதிரொலியாக தான் நடைபெறும் பசும் பொன் முத்துராமலிங்க தேவர் விழாவிற்கு இபிஎஸ் செல்லவில்லை. மேலும் முக்குலத்தோர் என்ற சமூகத்தை பார்த்தாலே எடப்பாடி பழனிசாமி பிடிக்கவில்லை. தென் தமிழகம் அதிமுகவின் கோட்டை உள்ளது. தென் தமிழகம் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. பசும் பொன் முத்துராமலிங்க தேவர் ஐயாவின் விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி ஏன் செல்லவேண்டும் என்று முறையான விளக்கம் அளிக்க வேண்டும்.



அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட கே.பி.முனுசாமிக்கு ஜெ மரணத்திற்கு பிறகு அரசியல் வாழ்க்கை வந்தது. இவர் பன்னீர்செல்வம் ஆதரவை பெற்று தான் பல பதவிகளை பெற்று வளர்ச்சியடைந்தார். ஆனால் தற்பொழுது அவரையே அவதூறாக பேசிவருகிறார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கைது செய்து கை விலங்கு போட்டு அழைத்து வர வேண்டும். கோவை சிலிண்டர் வெடிவிபத்தில் விசாரணை அறிக்கை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ரகசியங்களை பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது குறித்து உள்துறை அமைச்சகத்தில் தான் கேள்வி கேட்க வேண்டும். கொலை, கொள்ளை சம்பவங்கள் ஈடுபடும் அவர்கள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். முதல்வர் கவனம் செலுத்தி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.



மேலும் அதிமுக சிதறி போகாமல் இருக்க எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைத்தால் ஓபிஎஸ் சேர்ந்து கொள்வார். பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறையிடம் பேசிக்கொண்டிருந்ததால் செய்தியாளர்களை இவ்வாறு தரைகுறைவாக பேசி வருகிறார். ஒருநாள் செய்தியாளர்கள் அனைவரும் புறக்கணிக்கும் போது உங்களுக்கு தெரியவரும். பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து உலறி வருகிறார். அவர் இருந்தால் தமிழகத்தில் பாஜக வளராது. எனவே அண்ணாமலையை மாற்றினால் தான் பாஜகவிற்கு எதிர்காலம். மேலும் எடப்பாடி பழனிசாமியை ஓரம் கட்டவேண்டும்” என புகழேந்தி கூறினார்.