சேலம் மாவட்டம் எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக ஆட்சியில் மக்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாநாடு குறித்து முழுமையாக காட்டபடவில்லை. திமுகவினர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த மாநாடு நடத்தவில்லை. ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்றார்கள். ஆனால் 1.50 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தான் வந்தனர். இருக்கையில் காலியாக இருந்தது பார்த்தோம். அதிமுக மாநாட்டில் உணவு பொருட்கள் சரியாக வழங்கவில்லை என குற்றம்சாட்டினர். அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். திமுக இளைஞரணி மாநாடு குறித்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றையும் விமர்சனம் செய்து ஊடகங்களில் காட்டவில்லை என்றார்.



அரசு அலட்சியம்:


திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றார்கள். நீட் ரத்து ரகசியம் உங்களுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னார். 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியதாக கூறினார்கள். அந்த கையெழுத்து எல்லாம் மாநாட்டில் குப்பைக்கு சென்றுவிட்டது. லட்சக்கணக்கானோரிடம் கையெழுத்து வாங்கி குப்பையில் போட்டுள்ளனர். அப்படியென்றால் நீட் தேர்வு விவகாரத்தில் இந்த அரசு எவ்வளவு அலட்சியமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.


அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒன்று கூட மக்களுக்கு பயன்பட்டது அல்ல, அனைத்துமே அவர்களின் புகழ் பாடும் தீர்மானங்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் 520 அறிவிப்புகள் வெளியிட்டார்கள். அதில் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பச்சை பொய் பரப்பி வருகின்றனர். மேலும் அதிமுக கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைக்கப்படும். அதிமுக சரியான வழியில் கூட்டணி அமைக்கும். நாளைய தினம் அதிமுக தலைமை அறிவித்த குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்படுகிறது.


வெவ்வேறு கருத்துக்கள் கொண்ட 26 கட்சிகள் கொண்ட கூட்டணி இந்தியா கூட்டணி. அந்த அடிப்படையில் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவது கடினம். மேற்குவங்க முதல்வர் மம்தா கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் வந்துள்ளது. இன்னும் யார் யாரெல்லாம் வெளியே போகிறார்கள் என்பது பொருத்தது பார்ப்போம்.



புதிய பேருந்துகள் என்னாச்சு?


திமுக எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை திமுக இளைஞரணி மாநாட்டில் தெரிவித்துவிட்டனர். சீட்டு ஆடுவது, மது அருந்துவது, தூங்குவது. இதுபோன்ற மாநாட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். அதிமுக ஆட்சியின்போது தமிழகத்திற்கு பேருந்துகள் வாங்குவதற்காக ஜெர்மன் நாட்டோடு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஆட்சியில் போக்குவரத்து மானிய கோரிக்கைகள் 5000 பேருந்து புதிதாக வாங்கப்படும் என்று மூன்று ஆண்டுகளாக திருப்பி திருப்பி சொல்லி வருகின்றனர். இதுவரை பேருந்துகள் வாங்கப்படவில்லை.


அதிமுக ஆட்சியில் 15 ஆயிரம் பேருந்துகள் வாங்கப்பட்டது. குறிப்பிட்ட காலம் வரை தான் பேருந்துகள் இயக்கப்படும். அவையெல்லாம் கூடுதல் ஆண்டுகள் இயக்குவதற்கு திமுக ஆட்சியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ஆங்காங்கே பேருந்துகள் பழுதாகி இயங்காமல் நிறுத்தப்பட்டு வருகிறது. திறமையற்ற பொம்மை முதல்வர் ஆட்சியில் எந்த நிர்வாகமும் சரி இல்லை. திமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை உரிமையாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள். இதுவரை எதுவுமே நிறைவேற்றவில்லை.


அதிமுக ஆட்சியின்போது 96 மாத கால நிலுவைத் தொகையில் 46 மாதங்கள் தருவதாக கூறினோம். அப்போது தொமுச தொழிற்சங்கம் நீதிமன்றம் சென்றனர். ஆறு சதவீத வட்டியுடன் திருப்பி தரப்படும் என்று நீதிமன்றம் கூறியது. அதையும் இவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்கள் விருப்பமுள்ள கோவிலை கட்டி வருகின்றனர். அப்படி ஆலயம் எழுப்பினால் அனைவரும் அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிமுக ஆட்சியில் தான் ஏராளமான ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது. தேவாலயங்களுக்கும் நிதிகள் வழங்கப்பட்டது. அனைத்து மதங்களுக்கும் சமமாக செயல்பட்டோம்.


கோயில் கட்டினால் பின் செல்வார்களா?


இந்திய நாடு பல்வேறு மதங்கள் சாதிகள் கொண்ட அமைப்பு. அவரவர்களுக்கு பிடித்தவாறு கடவுளை வணங்குகின்றனர். கோவில் கட்டுபவர்கள்பின் அனைவரும் சென்று விடுவார்கள் என்று சொல்லமுடியாது என்றார். திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் பணியமர்த்தப்பட்டு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர் மகன் மருமகள் சம்பந்தப்பட்டதே காரணம்.1.2.24 அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசரப்பட்டு திறந்து விட்டனர். முழுமையான பணிகள் முடிந்த பின்னரே திருத்திருக்க வேண்டும். அவசரத்தில் திறந்ததால் தான் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். முழுமையாக கவனம் செலுத்தி செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.