சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் போட்டி. தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதிமுக கட்சி அமைப்பு தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 9 பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டது. குறிப்பாக மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட இணைச்செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள், பொருளாளர் என 9 பதவிகளுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட்டது. சேலம் புறநகர் மாவட்டத்திற்கான தேர்தல் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 



தேர்தல் பார்வையாளர்களாக கழக அமைப்புச் செயலாளர் அர்ஜுனன், ஊட்டி மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் விருப்ப மனுக்களை வினியோகம் செய்தனர். இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தனது விருப்ப மனுவை வாங்கினார். அதிமுக சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளுக்கு மேலாக அப்பதவியில் உள்ள அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி, இன்று மீண்டும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த பதவிக்கு வேறுயாரும் மனு தாக்கல் செய்யாததால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 



இதேபோல் சேலம் புறநகர் மாவட்ட கழக அவைத்தலைவர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் தங்கள் வேட்பு மனுக்களை ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் வழங்கினர். இன்றைய தினம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி புறநகர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் புறநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் குவிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் மாநில தலைவர் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதே போன்று சேலம் மாவட்ட செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இன்று காலை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் செயலாளர் பதவிக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அவரும் மீண்டும் சேலம் மாவட்ட செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.