'மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேளுங்க' கிருஷ்ணகிரி விவகாரத்தில் கொதித்தெழுந்த இபிஎஸ்!

கிருஷ்ணகிரியி்ல் பள்ளி மாணவியை ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்ததற்கு தி.மு.க.அரசு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இபிஸ் வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை:

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கண்டனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இப்போ என்ன சொல்றீங்க?

"அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை" என்று பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, "எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார்" என்று சொன்ன ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர்கள், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல்  ஸ்டாலின் மாடல் திமுக அரசே இக்கொடூரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

மன்னிப்பு கேட்க வேண்டும்:

பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும். கொஞ்சமேனும் மனசாட்சி இருப்பின், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க. மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதுடன், ஆளுங்கட்சிக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை இசிஆர் சாலையில் காரில் சென்ற இளம்பெண்களை தி.மு.க. கொடி பொருத்திய காரில் சென்ற இளைஞர்கள் விரட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தி.மு.க.விற்கு பலரும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்த நிலையில், பள்ளி மாணவியை ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola