அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டை எம்.ஜி.ஆர்., மாளிகையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள் அனைவரும், ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். 


அதிமுகவை, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வழிநடத்தி வரும் நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் பணியிடம் ஜெயலலிதாவிற்கு பின் காலியாக உள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக ஒரு தரப்பினர் தேர்வு செய்தனர். பின்னர், பிரிந்து கிடந்த இபிஎஸ்-ஓபிஎஸ் அணி இணைந்த பின், சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். அதுமட்டுமின்றி, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும் சிறைக்குச் சென்றதால் எந்த இடையூறும் இன்றி, அதிமுகவையும், ஆட்சியையும் இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டணி வழிநடத்தியது. 




அதன் பின் சசிகலா விடுதலையாகி வர, தேர்தலும் வர, அதன் பின் அதிமுக தோல்வியடைந்தது. அதன் பின், தோல்விக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் தான் காரணம் எனக்கூறி, அதிமுகவின் தலைமையை ஏற்க சசிகலா புறப்பட்டார். சட்டரீதியாக அவர் மேற்கொண்ட நடவடிக்கையும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்த, எதிர்கட்சியான பிறகும் ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டணியே அதிமுகவை வழிநடத்தியது. இருப்பினும், அதிமுக பொதுச் செயலாளர் என்றே சசிகலா தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.


இந்நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஜூன் 23 ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்த விவாதத்தை அனைவரும் ஒரே நேரத்தில் எழுப்பியுள்ளனர். இந்த கோரிக்கை அதிமுகவிற்கு புதிதல்ல என்றாலும், இந்த நேரத்தில் எழுப்ப காரணம், அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை நியமிக்கவே என்கிறார்கள். 


முதல்வர் பொறுப்பை ஏற்ற போதும், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பின் போதும், தோல்விக்குப் பின் எதிர்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்கும் போதும், இபிஎஸ் தான் அதிமுகவில் தனக்கான இடத்தை தக்க வைத்து வருகிறார். அதே நேரத்தில் ஓபிஎஸ் அடம் பிடித்தாலும், ஒவ்வொரு இடத்திலும் அவர் இறங்கியே போயிருக்கிறார். இம்முறை, ஒற்றை தலைமை என வரும் போது, அதிலும், கண்டிப்பாக இபிஎஸ்., தான் முன்னிலைப்படுத்த வாய்ப்புள்ளது. காரணம், ஆட்சி-கட்சி இரண்டும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்பதை தான் அதிமுகவினர் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், இபிஎஸ்.,யை முன்னிறுத்தியே தற்போதைய அதிமுக நகர்த்தப்படுகிறது. கடந்த காலத்தில் அவர் செய்த ஆட்சியை ஒப்பிட்டே, தற்போதைய திமுக ஆட்சி விமர்சிக்கப்படுகிறது. எனவே, கட்சி தலைமையை இபிஎஸ் கைப்பற்றவே வாய்ப்புள்ளது.


அப்படியிருக்கும் போது, அதிமுகவின் பொதுச் செயலாளராக வரும் பொதுக்குழு, செயற்குழுவில் இபிஎஸ் தேர்வாக வாய்ப்புள்ளது. அப்படியென்றால் ஓபிஎஸ் நிலை என்ன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இது ஒருபுறமிருக்க தான் தான் கட்சியின் பொதுச் செயலாளர் என்று கூறி வரும் சசிகலாவின் பிரசாரத்திற்கு முடிவு கட்ட, கட்டாயம் பொதுச் செயலாளர் நியமனம் வேண்டும் என்பதன் அடிப்படையில் தான், இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.