தமிழகத்தின் ஏழாவது முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்று (மே 12 ) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளில் அவர் கடந்து வந்த பாதையை ஒரு தொகுப்பாக பார்க்காலாம்.



ஆரம்பகால வாழ்க்கை:


சேலம் மாவட்டம் , எடப்பாடியில் உள்ள சிலுவம்பாளையம் என்னும் ஊரில் இதே நாளில் 1954 ஆம் ஆண்டு இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் பழனிச்சாமி. இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர் - தவசியம்மாள். சாதரண விவசாய குடும்பத்தை பின்னணியாக கொண்டவர். சொந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை படித்து முடித்த எடப்பாடி , பக்கத்து மாவட்டமான ஈரோட்டில் உள்ள  வாசவி கல்லூரியில் விலங்கியல்துறையில் சேர்நதார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படிப்பை முழுமையாக தொடர முடியவில்லை.  அதன் பிறகு சுற்றுவட்டார பகுதிகள் வெல்ல வியாபாரம் செய்து தனது குடும்பத்திற்கான செலவினங்களை பார்த்து வந்திருக்கிறார் எடப்பாடி கே.பழனிச்சாமி. தான் முதல்வராக பதவியேற்ற பிறகும் கூட தன்னை ஒரு விவசாயி என்றே காட்டிக்கொண்டவர் எடப்பாடி கே.பழனிச்சாமி. அதோடு தான் பிறந்து வளர்ந்த ஊரின் மீது கொண்ட பற்றின் காரணமாக , அதனை தனது பெயரின் முன்னால் இணைத்துக்கொண்டவர்.




அரசியல் வாழ்க்கை:


சாதாரண கிளைச்செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி இணைவதற்கு அமைச்சர் செங்கோட்டையன்தான் காரணம் என்கிறது சில பத்திரிக்கை தகவல்கள். 1974 ஆம் ஆண்டு  தனது 20  வயதில் கோணேரிப்பட்டி கிளை செயலாளரகா இருந்த எடப்பாடி பழனிச்சாமி, 1990-ம் ஆண்டில் சேலம் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளராகவும், 1991-ல் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும், 1993-ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராகவும், 2001-ல் தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் தலைவராகவும், 2006-ல் கழகக் கொள்கைபரப்புச் செயலாளராகவும் , 2011-ல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2014-ம் ஆண்டு கழக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் மற்றும் தலைமை நிலைய செயலாளராகவும், 2016-ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் படிப்படியாக முன்னேறினார்.1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார்.



முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி :


ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிக்கலாவை முதல்வராக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவரிடம் கெஞ்சிய காட்சிகளை நாம் செய்திகள் வாயிலாக அறிவோம். ஆனால் சசிகலா எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். அப்போது சசிக்கலாவின் சாய்ஸாக இருந்தவர்  எடப்பாடி கே.பழனிச்சாமி. 2017-ல் அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு ஜெயலலிதாவால் முன்னதாக தேர்வு செய்யப்பட்ட தற்காலிக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இவருக்கும் இடையில் பதிவி போட்டி இருந்ததாக கூறப்பட்ட நிலையில் , பலக்கட்ட கட்சி பேச்சுவார்த்தையில் அனைவராலும் ஒரு மனதாக கடந்த 2021 ஆம் ஆண்டும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கினார். ஆனால் மீண்டும் ஆட்சியில் அமர முடியவில்லை.




குற்றச்சாட்டுகள்:


எடப்பாடி ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் விவசாய நலன் சார்ந்த பல திட்டங்களை அமல்படுத்தியிருக்கிறார். குறிப்பாக காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்தது, அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியது, குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீர்மேலாண்மையை உறுதி செய்தது, விவசாய பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்களைத் தள்ளுபடி செய்தது போன்றவற்றை சொல்லலாம். ஆனால் 8 வழிச்சாலை , ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கிச்சூடு, மீத்தேன் திட்டத்திற்கு எதிரான போராட்டம்,  விலைவாசி உயர்வு போன்ற பல குற்றச்சாட்டுகளும் உண்டு.