பனங்காட்டுப்படை கட்சியின் முன்னாள் நிர்வாகியான ஹரிநாடார்  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு  30 ஆயிரம் வாக்குகள் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் கழுத்து, கைகளில் கிலோ கணக்கில் நகை அணிந்து நடமாடும் நகைக்கடை போல் வலம் வந்தவர் ஹரி நாடார். இந்நிலையில் மோசடி வழக்கு ஒன்றில் சிக்கிய ஹரி நாடார் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ஹரி நாடார் மீண்டும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் ஹரி நாடார் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினார்.


அதைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தில் விஏஓ ஒருவர் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கை அரசு துரிதப்படுத்தி மூன்று, நான்கு மாதத்திற்குள் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் சாத்தான்குளத்தில் அப்பாவி ஜெயராஜ், பெனிக்ஸ் படுகொலைக்கு 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு வருகிறது. காரணம் என்னவென்று பார்த்தால் அதிமுக ஆட்சியில் அந்த படுகொலை நடந்தாலும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் இதற்கு நீதி வேண்டும் என்று அன்று குரல் கொடுத்தார். ஆனால் இன்று அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினால் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் உடனடியாக தீர்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் தாமதப்படுத்துகிறார்கள்.  எனவே சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் அனைவருக்கும் தூக்கு தண்டனையை மிக விரைவில் வழங்க வேண்டும் என்பது தான் எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதை எதிர்பார்க்கிறோம்.


அதேபோல நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் படுகொலையில் விசாரணை இன்று வரை கண்துடைப்பாகவே இருக்கிறது. விசாரணை கிடப்பில் கிடைக்கிறது. விசாரணையின் நிலை என்ன என்பதை கூட தெரியப்படுத்தவில்லை. ஏனென்றால் ஆளும் கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடும், சட்டம் ஒழுங்கு சீர் இல்லை என அனைவரும் கொந்தளித்து விடுவார்கள் என பயந்து  அதை மூடி மறைக்கின்றனர். நாடார் சமுதாயம் சார்ந்து நடக்கும் இது போன்ற கொடூர படுகொலைக்கு திமுக அரசு நீதி வழங்க மறுக்கிறது என்ற வேதனை இருக்கிறது. எனவே சட்ட ரீதியாக நாங்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்.


எங்கள் சமுதாயத்தின் சார்பாக பனங்கள் இறக்க அனுமதி கேட்டு நாங்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் கள் விற்பனைக்கு இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கள் விற்பனையை புறக்கணிக்கிறார்கள். கள் விற்பனைக்கு வந்தால் திமுக மற்றும் கூட்டணி மந்திரிகளின் மது ஆலைகளுக்கு விற்பனை குறைந்து விடும் என்பதால் திமுக அரசு அதை விற்பனைக்கு கொண்டு வர மறுக்கிறது. உண்மையில் கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தால் கள்ளச்சாராயத்தை யாரும் காய்ச்ச மாட்டார்கள். யாரும் குடிக்கவும் மாட்டார்கள். இதை குடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் விவகாரத்தில் தமிழக அரசாங்கம் தலை குனிய வேண்டும். எனவே தாமாக முன்வந்து எங்களால் ஆட்சியை நடத்த முடியவில்லை கலைத்து விடுகிறோம் என சொல்ல வேண்டும் அப்படி கூறினால் தான் மக்கள் திமுகவை மன்னிப்பார்கள் என்று தெரிவித்தார்.