சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமை கழக பதவிகளுக்கு புதிய நியமனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தலைவராக மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


 






அதேபோன்று, திமுக துணை பொதுச்செயலாளராக ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, திமுகவில் ஐந்து பேருக்கு துணை பொதுச்செயலாளர் பதவிகள் வழங்கப்படும். அதில், எப்போதும் ஒரு பெண்ணுக்கு அப்பதவி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, அந்த பதவியில் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினார்.


எனவே, அவருக்கு பதில் அந்த பதவி யாருக்கு வழங்கப்படும் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. கீதா ஜீவன், பூங்கோதை ஆலடி அருணா, புதுக்கொட்டை விஜயா, தமிழச்சி தங்கபாண்டியன், சிம்லா முத்துசோழன், கனிமொழி ஆகியோரின் பெயர் அடிப்பட்டது. ஆனால், கனிமொழிக்கு அந்த பதவி வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.


வெளியான தகவலை உறுதி செய்யும் விதமாக இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கனிமொழிக்கே துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை மேடைக்கு அழைக்கையில், "டெல்லியில் ஒலிக்கக்கூடிய கர்ஜனை மொழி கனிமொழி" என ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். அப்போது, தொண்டர்கள் மத்தியல் பலத்த கரகோஷம் எழுந்தது.


பின்னர் பேசிய கனிமொழி, "1949ஆம் ஆண்டு  கழகத்தை தொடங்கிய போது அண்ணா இந்த கழகத்தின் செயல்கள் பெரியாரே போற்றும் வகையில் இருக்க வேண்டும் என்று உரைத்தார். அதே போல் சுயமரியாதை திருமணச் சட்டம் , தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அண்ணாவுக்கு பிறகு பொறுப்பேற்ற கருணாநிதி கழகத்தின் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து செயல்பட்டார். 


பலரின் ஆசையை பொய்யாக்கும் வகையில் வெற்றிடத்தை காற்றாக இல்லாமல் ஆழிப்பேரலையாக நிரப்பியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசியல் வெற்றியை பெற்று இன்று சனாதன சக்திகளிடம் இருந்து கொள்கைக்கைக் காக்க போராடி வருகிறார். இந்தப் போராட்டத்தில் இணைந்துப் போராட வாய்பளித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


கலைஞர்‌ இல்லாத இடத்தில் நாங்களும் இந்த நாடும் உங்களை வைத்துப் பார்க்கிறது. உங்களின் வழிநடத்தலை இந்த நாடு எதிர்ப்பாக்கிறது. சனாதன சக்திகள் நம் கல்வியை பறிக்கவும் பெண்களை மீண்டும் சமையலறைக்கு அனுப்பு முயல்கின்றனர். அப்பா இல்லாத இடத்தில் உங்களை பார்க்கிறேன்" என்றார்.